தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள்

பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என ஐ.நா-வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 31, 2019, 10:35 AM IST

Indian Foreign Policy  Big changes in 2019
Indian Foreign Policy Big changes in 2019


இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஆண்டு 2019. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க இது வழிவகுத்திருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறைக்கு ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பெரிய சவால் வந்தது. ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் என்ற அதிகாரத்தில், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது சீனா. இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பாக நிலவும் நீண்ட கால பிரச்னை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு அவையை அது வலியுறுத்தியது. ஏனெனில், இந்த விவகாரம் 1971 டிசம்பருக்குப் பிறகு ஐ.நா பாதுகாப்பு அவையின் விவாதத்திற்கே வரவில்லை. பாகிஸ்தானோடு கூட்டுச் சேர்ந்து இந்த முயற்சியை மேற்கொண்டது சீனா. அதேநேரத்தில், தனது பன்முக வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், அக்டோபரில் சென்னையில் நடைபெற்ற இந்திய – சீன முறைசாரா உச்சிமாநாட்டின் மூலம் தான் இந்தியாவுக்கு எதிரி அல்ல என்ற பிம்பத்தையும் சீனா ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், புல்வாமாவில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டுடனான இந்தியாவின் உறவு மேலும் மோசமடைந்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்தியா அதிரடி வான் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, இந்தியாவுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்வதாக கடந்த ஆகஸ்ட்டில் பாகிஸ்தான் தன்னிச்சையாக அறிவித்தது. அதோடு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டது பாகிஸ்தான். இருந்தபோதும், பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூருக்கு இந்திய சீக்கியர்கள் சாலை வழியாக தொடர்ந்து சென்று வருவதற்கான பாதை நவம்பரில் திறக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு முழுவதும் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் தொடர்ந்து பரிவர்த்தனைகள் மேற்கொண்டது. அண்டை நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு மேலும் வலுவடைய இது வழிவகுத்தது. 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனப். 2019 ஜூனில் அவர் இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்றபோது, சார்க்கின் மறு உருவாக்கமான BIMSTEC ( பங்களாதேஷ், பூடான், நேபால், இலங்கை, மியான்மர் ) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். மாலத்தீவின் புதிய பிரதமர் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவை தேர்வு செய்ததிலும், இதேபோல், இலங்கையின் புதிய அதிபர் முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவை தேர்வு செய்ததிலும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

2019ன் இறுதியில், இந்தியாவின் கிழக்கில் ஏற்பட்ட போராட்டங்கள் வட கிழக்கு மாநிலங்களோடு, பங்களாதேஷ், மியான்மரை பொருளாதார ரீதியில் ஒருங்கிணைப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. டிசம்பர் மத்தியில் கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – ஜப்பான் உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்ட சம்பவமும், ஆசிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் இணைவதில்லை என நவம்பரில் இந்தியா எடுத்த முடிவும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் திறன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தனது இணையாண்மையை பாதுகாப்பதற்கான வல்லமையை இந்தியா எந்த அளவு கொண்டிருக்கிறது என்பதை கடந்த 2019ல் நிகழ்ந்த 3 நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. முதலாவதாக, இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் சாகோஸ் தீவில் இருந்து அந்நாடு, 6 மாத காலத்திற்குள் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐ.நா. பொது அவை தீர்மானத்தை இந்தியா வெளிப்படையாக ஆதரித்தது. இவ்விஷயத்தில், மொரிஷியசுக்கு ஆதரவாக நின்றது இந்தியா.

இரண்டாவதாக, பசுபிக் பெருங்கடல் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், அந்நாடுகளுடன் டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. வளைகுடா நாடுகள் உட்பட பசுபிக் பெருங்கடல் நாடுகள் விஷயத்தில் இந்தியாவின் தெளிவான வெளியுறவுக் கொள்கையை அது வெளிப்படுத்தியது.

மூன்றாவதாக, கடந்த செப்டம்பரில், சென்னையையும் ரஷ்யாவின் விளாதிவோஸ்டோக் நகரத்தையும் கடல் மார்க்கமாக இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிரச்னைகளின் அடிப்படையிலேயே அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்தியா ஆதரிக்கும் என்பது 2019ல் நிரூபணமானது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவில் வேறுபாடுகள் உள்ள போதிலும், இரு நாடுகளுக்கு இடையேயான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்காக, இரு நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதேபோல், உற்பத்தித் துறையில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுவது, பாதுகாப்பு உதிரி பாகங்களை கூட்டாக தயாரிப்பது ஆகியவற்றில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தொழில் மேம்பாட்டிற்காக அந்நாட்டிற்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பிரான்சை பொறுத்தவரை அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம், இந்திய பெருங்கடல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு போன்றவற்றில் இணைந்து செயல்படுவது என உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான தனது ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. ஐ.நா பாதுகாப்பு அவை, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான பங்களிப்பை இந்தியா பெற முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. உலகை கட்டமைக்க பரவலாக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்ட ஆசியாவை கட்டமைப்பது அவசியம் என்ற தனது இலக்கை நோக்கி இந்தியா 2019ல் முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க:

சூழலைக் காக்க முதலில்... "Say No to Single Use Plastic"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details