ஐநாவில் உரை நிகழ்த்துவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜி. பார்த்தசாரதி, நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், "அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் விவகாரம் முக்கியம். இந்தியா இதனை மனதில் வைத்துக்கொண்டு அமெரிக்காவுடனான உறவை வளர்க்க வேண்டும். ஆப்கானில்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை அந்நாடு திரும்ப பெற்றுள்ளது. நாம் நம் திட்டங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எப்போதும் போர் தொடுக்காது. அப்படி தொடுத்தால் என்னவாகும் என்பது அந்நாட்டுக்கு தெரியும்" என்றார்.
'காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ரஷ்யா இல்லை'
ஆப்கானிஸ்தான் பிரச்னையால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தனக்கு ஆதரவளிக்கும் என பாகிஸ்தான் எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. மற்ற இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன.
74ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில், சையது அக்பருதீன் தலைமையில் சிறப்பான திறமை வாய்ந்த குழு இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தியது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. அதனை இந்தியா சரியாக கையாண்டது. பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் வழங்கும் நிதியை அது பாதுகாப்புத்துறைக்காகவே செலவு செய்கிறது. இதனால், அதன் பொருளாதாரம் மோசமாக உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதற்கு ரஷ்யாவின் உதவியை அது நாடியது. ஆனால், இந்தியாவுடன் ரஷ்யா நல்லுறவைப் பேணுவதால், இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட பாகிஸ்தானுக்கு ரஷ்யா ஆலோசனை கூறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு ரஷ்யா செவி சாய்க்கவில்லை.