வரும் 2025ஆம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்காக 14 நாடுகளை தனது இலக்காகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளர், பாதுகாப்புத்துறை மூத்த அலுவரிடம் பேசுகையில், ”இந்தியா, தான் உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களை விற்பதற்கு 14 நாடுகளைக் கண்டறிந்துள்ளது. அதற்காக ஆசிய, மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது” எனக் கூறினார்.
உலக அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சௌதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக SIPRI என்ற அமைப்பு வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேக் இன் இந்தியா திட்டம் மூலம் ராணுவத் தளவாட உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்த உள்ளது.
ஆனால், ஏற்றுமதியில் இந்தியா மிகவும் பின்தங்கி 23ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் மொரிஷியஸ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன. இது குறித்து பாதுகாப்பு செயலர் ராஜ் குமார் பேசுகையில், ”வளர்ந்து வரும் நாடுகள் பல, இந்தியாவுடன் நட்பு நாடாக உள்ள நிலையில், இந்தியா அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தயாரித்து உலகிற்கு வழங்கும் பாதையில் நாடு பயணிக்கிறது” என்றார்.
ரேடார், துப்பாக்கி, ஏனைய முக்கியத் தளவாடங்களை, இந்தியா கூட்டு ரகத்தில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக ஓ.இ.எம். அமைப்பிடம் லைசென்ஸ் பெற முயற்சி எடுத்து வருகிறது. DPEPP என்ற வரைவறிக்கையைத் தயார் செய்து இது தொடர்பான பொதுக் கருத்துகளை இணைய வாயிலாக பாதுகாப்பு அமைச்சகம் பெற்று வருகிறது.