தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 17, 2020, 2:02 PM IST

ETV Bharat / bharat

கோவிட்-19: சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி காணொளி சந்திப்பு

கரோனா வைரஸ் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற வருமாறு சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தி மூலம் அழைப்பு  விடுத்த நிலையில் காணொளி சந்திப்பு நடந்தேறியது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்த பிராந்திய நிலைப்பாட்டின் போது, சார்க் மாநாட்டின் அரசியல் மறுமலர்ச்சி குறித்து பேசுவது சரியானதன்று. சார்க் காணொளி ஆலோசனை சந்திப்பில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியது தேவையற்றது: இந்திய தரப்பு.

கோவிட்-19 சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற வருமாறு, சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தி மூலம் அழைப்பு விடுத்து இரண்டு நாள்கள் ஆன நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற காணொளி சந்திப்பு நடந்தேறியது. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும், பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றரை மணி நேர காணொளி ஆலோசனை சந்திப்பில் இடம்பெற்றனர். பாகிஸ்தான் பிரதருக்கு பதிலாக அவரது சிறப்பு பிரதிநியாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா பங்கேற்றார். வெள்ளிக்கிழமை பிரதமர் ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்த அடுத்த ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்குள், சார்க் பிராந்திய தலைவர்கள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், சனிக்கிழமையன்று முடிவு செய்யப்பட்டு, ஞாயிறு மாலை காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

”சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நாடுகளை ஒப்பிடும்போது, மக்கள் தொகை அதிகம் கொண்ட சார்க் பிராந்திய நாடுகளில் இதுவரை கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 150 தான். ஆயினும், வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், இப்போதே எச்சரிக்கையாக இருப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்” என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார், அவர் மேலும் கூறும்போது, “நம் சார்க் பிராந்திய நாடுகளுக்குள் பொதுவான எல்லைகள் இருப்பதோடு, ஏறக்குறைய பொதுவான சூழல்கள் நிலவி வருவதால், உறுப்பு நாடுகள் ஒன்றாக கைகோர்த்து ஒருமித்த கருத்துக்களை உருவாக்க வேண்டும். தற்போதைய சூழலில் இந்த ஒருங்கிணைவு மிக முக்கியமானது” என்றார்.

கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை, சார்க் பிராந்திய நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான சிக்கல்கள் உள்ளன. மிகச் சிறிய நாடான மாலத்தீவுகளில் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான போதுமான வசதிகள் இல்லை. இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கு, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து, ஆஃப்கானிஸ்தானுக்கு செல்கின்றனர். இதன் எல்லை சீனாவுடன் இருப்பதால், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. சார்க் நாடுகளுக்குள் வேறு சில சிக்கல்கள் இருந்தாலும், இந்த சூழலில் அனைவரும் கைகோர்த்து செயல்படுவது இன்றியமையாதது என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆயினும், இந்த சூழலால் சார்க் நாடுகளுக்குள் அரசியல் ரீதியில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று கூறிவிட முடியாது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த யூரி தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தான் தலைமையில் நடந்த சார்க் உச்சி மாநாட்டை இந்தியா தலைமையில் புறக்கணிப்பு செய்யப்பட்டதிலிருந்து, இறுக்கமான சூழல் தான் தற்போது வரை நிலவிவருகிறது. இதன் பிரதிபலிப்பாக, இந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலில் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இறுதியில் காணொளிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே, இந்த காணொளி சந்திப்பில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பங்கேற்க முடிவு செய்திருந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமரின் இந்த நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காணொளி ஆலோசனையின் போது, தனக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் ஆக்கப்பூர்வ கருத்தைத் தெரிவிக்காமல், காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சனையை பாகிஸ்தானின் பிரதிநிதி எழுப்பியது “தேவையற்றது” எனவும் “நாகரிகமற்றது” எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. “நமது நட்பு நாடுகள் ஒருமித்த அரசியல் கருத்தோடு மனிதாபிமான அடிப்படையில் இப்போதைய அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள முயற்சிக்கின்றன” என்று தெரிவித்த மூத்த அதிகாரி, “அனைவருக்கும் பொதுவான பிரச்னைக்காக சார்க் தலைவர்கள் ஆலோசிக்கும்போது, சார்க் மாநாட்டின் அரசியல் மறுமலர்ச்சி குறித்து ஆலோசிக்கக் கோருவது பக்குவமற்ற பேச்சு. ஒரு பிரச்னை குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சிக்கும்போது, இன்னொரு பிரச்னையை நுழைப்பது சரியாகாது. பாகிஸ்தானின் கருத்து, எந்த வகையிலும் தலைவர்களிடையே அனுகூலமான பார்வையை உண்டாக்காது,” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்று எதிரொலியாக, சீனாவிலிருந்து 766 பேர், ஜப்பானில் இருந்து 124 பேர், ஈரானிலிருந்து 336 பேர், இத்தாலியிலிருந்து 218 பேர் என, பல்வேறு நாடுகளிலிருந்து தங்களது குடிமக்கள் 1444 பேரை இந்தியா மீட்டு வந்துள்ளது. வைரஸ் பாதித்தவர்களை வெளியேற்றுவது அரசின் நோக்கமல்ல, வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக அவர்களை அங்கேயே தங்கி பாதுகாப்பாக இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் முதல் குறிக்கோள். தற்போது மருத்துவ வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இத்தாலி, ஈரான் நாடுகளில் வைரஸ் தொற்று பாதிக்காத இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் வெளியுறவுத் துறை கூடுதல் செயலரும், கோவிட்-19 ஒருங்கிணைப்பாளருமான டம்மு ரவி தலைமையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்தப் பிரிவின் மூலம், பல்வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அங்கு தவித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சார்க் காணொளி ஆலோசனை சந்திப்புக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த நோய்த்தொற்று எதிர்ப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இந்தியா, அதன் தொடக்கமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிப்பதாகவும், பிராந்திய நாடுகளின் கோரிக்கை அடிப்படையில், நோய்த் தொற்று தடுப்பு ஆய்வுகளுக்கான மருத்துவ ஆய்வுக்குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று நடந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, சார்க் நாடுகளின் வெளியுறவு செயலர்கள் மூலம் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருமித்த முடிவுகள் செயல்படுத்தப்படும். இதன் தொடக்கமாக, மாலத்தீவுகள் கேட்டுக்கொண்டதன் பேரில் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவிலிருந்து மருத்துவ ஆய்வுக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். அத்துடன் ஈரான் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, அங்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “பெயரளவுக்கு இந்த நோய்த்தொற்று நிதியை நாங்கள் முன்மொழியவில்லை. முனைப்புடன் செயல்படுத்தி அதனை முறியடிக்க வேண்டும் என்பதை சாத்தியமாக்குவதே எமது குறிக்கோள்,” என்று அரசு அதிகாரி தெரிவித்தார்.

சார்க் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து, இதே போன்ற ஆன்லைன் கட்டமைப்பின் வழியாக ஜி20 நாடுகளையும் ஒருங்கிணைத்து, உலகளாவிய நோய்த்தொற்றுக்கு எதிராக போராட இந்தியா அழைப்பு விடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details