தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2020, 10:45 AM IST

ETV Bharat / bharat

சீனாவுக்கு பிரதமர் மோடி சொல்லும் பதில் என்ன - முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட திடீர் பயணம் குறித்து முன்னாள் ஜெனரல் டி.எஸ். ஹூடா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Ladakh
Ladakh

தனது எதிர்பாராத செயல்களால் நாட்டை ஆச்சரியப்படுத்தும் திறனுக்காக பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறியப்பட்டவர். கடந்த ஜூலை மூன்றாம் தேதி மோடி லே பகுதியில் தரையிறங்கியது, காயமடைந்த வீரர்களைப் பார்த்தது, கூட்டங்களில் கலந்து கொண்டது, உற்சாகமான உரை நிகழ்த்தியது போன்ற செய்திகள் நமது தொலைக்காட்சித் திரைகளில் தெரிந்தன. கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே நடந்து வரும் மோதலின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மோதல் நடந்த இடத்திற்கு பிரதமரின் வருகை, நெருக்கடியின் தீவிரத்தன்மையில் அரசாங்கம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இராணுவ அளவிலான பேச்சு வார்த்தைகள் ஒரு தீர்மானத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில், இந்த விவகாரம் அரசாங்கத்தால் குறைத்து மதிப்பிடப்படுவதாக கருத்துக்கள் வெளி வந்தன. ஜூன் 15ஆம் தேதி அன்று கல்வானில் நடந்த வன்முறைத் தாக்குதலால் அந்த நம்பிக்கை சிதைந்தது.

தற்போதைய சீன நடவடிக்கைகள் இரு தரப்பினரின் பரஸ்பர திருப்திக்கு சமாதானமாக தீர்க்கப்பட்ட கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் இப்போது ஒரு தெளிவான புரிதல் இருப்பதாகவும் நான் நினைக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாகத்தான், சீன வெளியுறவு அமைச்சகம் “விரைவில் பதட்டங்களை குறைப்பது, மற்றும் அமைதியைப் பாதுகாப்பது” பற்றிப் பேசுகிறது.

இருந்தாலும், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்றுக்கொள்ள முடியாத உரிமைகளை முன்னெடுக்க அவர்கள் தயங்கவில்லை, மேலும் இந்தியா தனது பகுதி என்று கூறும் பகுதிகளில் தங்கள் இராணுவ நிலைகளை வலுப்படுத்துவதிலும் மும்முரமாக உள்ளனர்.

நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததை இந்தியத் தரப்பினரால் ஏற்க கொள்ள முடியவில்லை என்பதற்கான அறிகுறியாக இந்த லடாக் பயணம் அமைந்துள்ளது. தனது பயணம் சீன அரசாங்கத்திடமிருந்து ஒரு எதிர்வினையைத் தூண்டும் என்பதை பிரதமர் அறிந்திருந்தார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "இந்த நேரத்தில் நிலைமையை மோசமாக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் எந்த தரப்பும் ஈடுபடக்கூடாது" என்று கூறினார். இந்த பயணத்தின் மூலம், உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருக்கும் முட்டுக்கட்டைக்கு ஒரு குறிப்பிட்ட விரிவாக்க நிலை விரும்பத்தக்கது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் பேச்சு நேரடியாகவும் கடினமானதாக இருந்தது. சீனாவின் விரிவாக்கத்தை, “விரிவாக்க சக்திகள் இழந்துவிட்டன அல்லது பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதற்கு வரலாறு சாட்சி” என்று குறிப்பிட்டார். "பலவீனமானவர்கள் ஒருபோதும் அமைதியைத் தொடங்க முடியாது" என்று குறிப்பிடுவதிலிருந்து பலவீனமான நிலையில் உள்ளவர்களிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்பதற்கான சமிக்ஞையாக இருந்தது.

உள்நாட்டு விமர்சகர்கள் பற்றியும் பிரதமர் அறிந்திருந்தார். சீன வீரர்கள் இந்தியப் பிரதேசத்தில் ஊடுருவவில்லை என்ற அவரது கருத்து குறித்த சில விமர்சனங்களுக்குப் பிறகு, இந்திய எல்லைக்குள் விரிவாக்கம் செய்வதற்கான சீன முயற்சிகளுக்கு இந்தியா உறுதியாக பதிலடி கொடுக்கும் என்று குடிமக்களுக்கு உறுதியளிக்க முயன்றார். பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள், மின் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில்கள் ஆகியவற்றில் சீன நிறுவனங்களின் பங்களிப்பை மறு ஆய்வு செய்வதற்கான சமீபத்திய அரசாங்க முடிவுகளிலும் இது பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் நோக்கம் தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் கடினமான பாதையில் செல்ல வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில தொலைக்காட்சி ஊடகங்கள் சீனர்களுக்கு எதிராக நாம் ஏற்கனவே ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம் என்பதை உறுதிப்படுத்த மிகவும் பரபரப்பான தலைப்புச் செய்திகளை உருவாக்குவதற்கான தீவிரமான போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது. இது நமக்கு மன நிறைவை தரக்கூடும்.

கடினமான உண்மை என்னவென்றால், இப்போது பிரதமர் நாங்கள் உறுதியுடன் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தாலும், சீன வீரர்கள் இந்திய பகுதியாக நாம் கருதும் இடங்களில் தொடர்ந்து இருப்பார்கள். ஏணியில் நாம் ஒரு படி ஏறிவிட்டோம், ஆனால் ஒவ்வொரு படியிலும் அபாயங்கள் உள்ளன.

மோதல் என்பது ஒருதலைப்பட்ச போட்டி அல்ல, எதிராளியும் தனது கருத்தை கூறுகிறார். எனவே, உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விட்டுக்கொடுக்காத நமது நிலைப்பாட்டான நமது கொள்கைகளுக்கு பதிலடி கொடுப்பது அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவ மோதல் வரை செல்லக்க்கூடிய சீனாவின் எதிர்வினைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு சக்திவாய்ந்த மற்றும் உறுதியான அண்டை நாட்டை சமாளிக்க ஒருங்கிணைந்த இராணுவ ஆயத்தங்கள் மற்றும் முழு அரசாங்க அணுகுமுறையும் தேவைப்படுகின்ற ஒரு நீண்ட பயணத்தில் இருக்கிறோம். பேசிக் கொண்டிருப்பதோடு நில்லாமல், நமது கொள்கை முடிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய தெளிவான பார்வைக்கு நாம் செல்ல வேண்டும்.

இந்தியா அதன் செயல்களுக்குத் தயாராகும்போது, ​​சீனத் தலைமையும் அவர்களது செயல்களின் விளைவுகள் குறித்து ஆழமாக ஆராய வேண்டும். சண்டைகளில் வென்றதை போரை வென்றதுடன் ஒப்பிடுவது என்பது, தந்திரமான சிந்தனையின் மிகப்பெரிய முட்டாள்தனங்களில் ஒன்று. கேத்தல் ஜே. நோலன், The Allure of Battle என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:

"சண்டை நாளில் மட்டும் வெற்றி பெறுவது போதாது., ஒரு ஆண்டு, பின்னர் தலைமுறை என்று நீங்கள் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளிலும் வெல்ல வேண்டும். வெற்றி என்பது ஒரு அரசியல் நிரந்தரத்துவத்தை அடைய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மீண்டு வரவும் மறு சீரமைப்பு செய்யவும் கிடைக்கும் சிறிய இடைவெளிக்குப் பிறகு, போர் மீண்டும் தொடரும் "

பாங்கோங் சோ பகுதியின் வடக்கு கரையில் நடந்த சண்டையில் தாங்கள் வென்றதாக சீன இராணுவம் நினைக்கக்கூடும், ஆனால் அவர்கள் இந்தியா-சீனா விரோதத்தின் ஒரு சகாப்தத்தில் இறங்கியுள்ளனர், இது பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும். எதிர் காலத்தில் இது எவ்வாறு இருக்கும் என்பது நிச்சயமற்றது, ஆனால் முன்கூட்டிய வெற்றியை அறிவிப்பது முட்டாள்தனமான ஒன்று. அது இரு தரப்பினருக்கும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:முதலில் ஸ்பானிஷ் ஃப்ளூ, பிறகு கரோனா - இரு பெரும் தொற்றுகளை வீழ்த்திய 106 வயது சாதனை மனிதர்!

ABOUT THE AUTHOR

...view details