ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் இயங்கிவருகிறது. இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் நிறுவி ஆன்மிக பணிகளை செய்து வருகிறார். இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகள் இருக்கின்றன. இதில் சென்னையில் மட்டும் 22 கிளைகள் உள்ளன.
கல்கி ஆசிரமத்தில் 2ஆவது நாளாக தொடரும் சோதனை!
சென்னை: கல்கிக்கு சொந்தமான ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் 2ஆவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி பகவான் ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு போதை பொருள் கொடுப்பதாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் அதிக பணம் வசூலிப்பதாகவும், அவரது மகன் கிருஷ்ணா நடத்தும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில் வருமான வரி துறையினர் இந்தியா முழுவதும் 40 இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கல்கி பகவான் அலுவலகம், நுங்கம்பாக்கம் அலுவலகம், ஆந்திரா ஆசிரமம் என பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில், முதல் நாள் முடிவில் கணக்கில் காட்டப்படாத 33 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரி துறையினர் தெரிவித்தனர். மேலும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து 2ஆவது நாளாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றன. இச்சோதனையின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'என்னைப் பார்த்து சிரித்ததால்தான் ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவி பறிபோனது' - ஸ்டாலின்