கர்நாடக மாநிலம், தக்ஷினா (Dakshina) மாவட்டத்தின் துணை ஆணையரான சசிகாந்த் செந்தில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயதான சசிகாந்த் 2009ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் ஆவார். ஓய்வு பெற இனியும் ஆண்டுகள் பல இருக்கும் நிலையில், திடீரென ஐஏஎஸ் அலுவலர் சசிகாந்த் ராஜினாமா செய்திருப்பது சக அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், ராஜினாமா செய்துள்ளது தனது தனிப்பட்ட முடிவு என்றும் அது யாரையும், எதையும் சாராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஐஏஎஸ் அலுவலர் திடீர் ராஜினாமா
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தக்ஷினா மாவட்ட துணை ஆணையராக பதவி வகித்து வந்த சசிகாந்த் செந்தில் என்ற ஐஏஎஸ் அலுவலர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இந்த முடிவை எடுத்ததற்கு காரணம் நாட்டில் அடிப்படையான ஜனநாயகம் சமரசம் செய்யப்பட்டதுதான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வருங்காலங்களில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், வெளியிலிருந்து மக்களுக்கு தனது பணியை தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார். தன்னுடன் பணியாற்றிய அனைத்து சக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் கோபிநாத் கண்ணன் அந்தமான் நிக்கபார் தீவில் ஆட்சியர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த உத்தரவை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தொடர்ந்து இரண்டு ஐஏஎஸ் அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.