தெலங்கானா மாநிலத்தின் முன்னணி செய்தித்தாள் நிறுவனம் ஈநாடு. இந்த நாளேட்டில் கடந்த வாரம் வெளியான ஒரு சிறுமியின் புகைப்படம் காட்டுத்தீ போல் வைரலானது. இந்தப் புகைப்படத்தை அவுலா ஸ்ரீநிவாஸ் என்பவர் எடுத்திருந்தார். அந்தப் புகைப்படத்தில், மோத்தி திவ்யா என்ற சிறுமி வகுப்பறைக்கு வெளியே நின்றுகொண்டு கையில் பாத்திரத்துடன் வகுப்பை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
அதற்கு 'பசிப் பார்வை' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தலைப்பு அந்தச் சிறுமியின் வாழ்க்கையில் அறிவுப் பசியையும் வயிற்றுப் பசியையும் போக்கும்வகையில் அமைந்தது. குப்பைத் தொழிலாளர்களுக்கு மகளாக பிறந்த மோத்தி திவ்யா, வறுமையின் பிடியால் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் குடிசை வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது பள்ளிக்கூடம்.