கரோனா வைரஸ் காரணமாக உலகமே பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால், இதுவரை 78 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 2 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்தனர். இதனால் மக்களுக்கு கரோனா என்ற பெயரே பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.
ஆனால், 2015ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள ஒர்யு ஹோட்டலுக்கு 'ஹோட்டல் கரோனா' என்று பெயரிடப்பட்டுள்ள சம்பவம், அந்த ஹோட்டலைக் கடந்து செல்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் சிறிது நேரம் தங்களது வாகனங்களை நிறுத்தி, செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டுமானால், இளைஞர்களின் புதிய செல்ஃபி பாய்ன்ட்டாக 'ஹோட்டல் கரோனா' மாறியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் முக்கியத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இந்த 'ஹோட்டல் கரோனா'. 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் குறித்து அதன் உரிமையாளர் பாக்கர் அலியிடம் பேசினோம். அதில், '' குஜராத்தி மொழியில் கரோனா என்றால் கிரீடம் என்று அர்த்தம். அந்த அர்த்தத்தில் தான், அப்போது ஹோட்டல் கரோனா என்று பெயர் வைத்தோம். ஆனால், இந்த நேரத்தில் மக்கள், இந்த ஹோட்டல் பெயரை உயிர்க்கொல்லும் நோயுடன் ஒற்றுமைப்படுத்திப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.