தமிழ்நாடு

tamil nadu

கை சின்னத்தை விமர்சிப்பதை விடுத்து எல்லையை கவனியுங்கள் - ராகுல் காந்தி மறைமுகத் தாக்கு

By

Published : Jun 9, 2020, 2:31 PM IST

Updated : Jun 9, 2020, 4:03 PM IST

டெல்லி : காங்கிரசின் கை சின்னத்தை விமர்சிப்பதில் கவனம் செலுத்துவதைக் கைவிட்டு, எல்லையில் சீனாவின் படைகள் ஆக்கிரமிப்பு செய்வதை கவனியுங்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சரை ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக லடாக் பகுதியில் சீனா சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவப் படையினரை குவித்து, இந்தியாவில் ஆக்கிரமிப்புப் பணிகளை மேற்கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த அசாதாரண சூழலால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லையில் நிலவும் உண்மையான நிலவரத்தை மறந்து, கனவுலகத்தில் வாழ்கிறார் என்றும் நேற்று ராகுல் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் விதமாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”கையில் வலி ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை செய்யலாம். ஆனால் கையே வலியாக மாறினால் அதற்கு என்ன செய்வது” என காங்கிரசின் கைச் சின்னத்தை ட்விட்டரில் கவித்துவமாக விமர்சித்திருந்தார்.

ராஜ்நாத் சிங்கின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக ராகுல் தற்போது ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”கைச் சின்னத்தை விமர்சிக்கும் பாதுகாப்பு அமைச்சர், சீனப்படையினர் இந்தியப் பகுதியான லடாக்கை ஆக்கிரமித்துள்ளார்களா என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளமான ட்விட்டரில், ராகுல் காந்தி, சீனா விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் காரசார விவாதத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க:தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல்

Last Updated : Jun 9, 2020, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details