மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபின், அரசு சாரா அமைப்புகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.
அதன் அடிப்படையில், வெளிநாட்டு நன்கொடை சட்ட விதிகளை மீறிய பல அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகளின் உரிமம் ரத்துசெய்யப்பட்டன. தற்போது நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரத்து 400 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில் என்.ஜி.ஓ.க்கள் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதில், "சட்டத்தின் 12ஆவது பிரிவின் (4) உள்பிரிவான (பி)-யின் கீழ் பதிவுசெய்து, வெளிநாட்டு நிதியுதவியைப் பெற விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது தன்னார்வ நடவடிக்கைகளில் குறைந்தது 15 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை மக்கள் பணிக்குச் செலவழித்திருக்க வேண்டும்.
களப்பணியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும்.
வெளியுறவு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவுசெய்ய விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலர்கள், தங்களது நன்கொடையாளரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட உறுதிப்பாட்டு கடிதத்தை வாங்கி அதனைப் பதிவாணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த உறுதிப்பாட்டு கடிதத்தில், வெளிநாட்டு பங்களிப்பின் அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக அவை வழங்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலக பொறுப்பாளர்களின் ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கட்டாயமாக வழங்க வேண்டும்.