தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 30, 2020, 1:08 AM IST

Updated : Sep 30, 2020, 8:41 AM IST

ETV Bharat / bharat

கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளான உ.பி. பட்டியலின பெண் மரணம்!

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நான்கு ஆதிக்கச் சாதி வெறியர்களால் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 19 வயது பட்டியலின பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளான உ.பி., தலித் பெண் உயிரிழந்தார்!
கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளான உ.பி., தலித் பெண் உயிரிழந்தார்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதி காட்டுப்பகுதியில் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து நாளுக்கு நாள் உடல் நிலை மோசமடைந்தை அடுத்து, கடைசியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செப்டம்பர் 23 அன்று காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சந்தீப், ராமு, லாவ்குஷ், ரவி ஆகிய நால்வர்தான் இந்தக் குற்றத்தைப் புரிந்தது உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும், அவர்களைக் கைதுசெய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக குற்றவாளிகள் சந்தீப், ராமு, லாவ்குஷ், ரவி ஆகிய நால்வர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர்.

டெல்லி மருத்துவமனையில், கடந்த பதினைந்து நாள்களாக உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிவந்த அந்த இளம்பெண் நேற்று (செப். 29) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பட்டியலின இளம்பெண்ணுக்கு நீதி கேட்டும், உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

Last Updated : Sep 30, 2020, 8:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details