மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சை, கொல்லாமையைப் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்தார். அதேவேளையில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றியும் ஆழமான பார்வையைக அவர் கொண்டிருந்தார். தூய்மை குறித்து மிகுந்த கவனம் கொண்டிருந்த காந்தி சுற்றுச்சூழலுக்கு மனிதனால் எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது என்ற கருத்தைத் தனது எழுத்துகளில் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின் சத்தியாகிரகத்தில் தீவிரமாக ஈடுபட்ட காந்தி தனது ஆசிரம வாழ்க்கையில் பல்வேறு ஒழுங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். உண்மையைப் பேசுதல் என்பதன் மூலம் எதிர் தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் காந்தி. அதேபோல் அகிம்சை கொள்கையைப் போதித்த அவர் பசுவின் பால் அதன் கன்றுக்கே சொந்தம் எனப் பசும்பால் பயன்படுத்தவதைக்கூட தவிர்த்துவந்தார். பின்னர் தன் மனைவியின் உடல்நிலை கருதியும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படியும் ஆட்டுப்பால் குடிக்கத்தொடங்கினார்.
ஆடம்பர உடைமைகளைத் தவிர்த்து எளிமையான வாழ்வை அறிவுறுத்திய காந்தி, அதற்கான விளக்கத்தையும் இயற்கையிடமே கண்டடைந்தார். மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கையே இயல்பில் கொடையாக அளித்துள்ளது. அதையும் மீறிக் கூடுதல் நுகர்வை மனிதன் மேற்கொள்வது என்பது இயற்கைக்கு இழைக்கும் அநீதி எனக் கருதினார் காந்தி.