கரோனா எதிரான இந்தியாவின் போர் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை மே மாத இறுதிதான் முடிவு செய்யும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். நிதி ஆயோக்கின் புள்ளி விவரம், இந்த மாதம் 15ஆம் தேதிக்கு இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்துக்கு உயரும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அது 2.7 கோடியை எட்டிவிடும் என்கிறது. இந்தப் பெருந்தொற்றால் மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தும் ஏற்படப்போகும் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கம் இரு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதில் முதலாவது, தேசிய அளவில் ஊரடங்கை இரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டு, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது. அடுத்தது, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது.
பாதிப்பு அதிகமாகவுள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற இடங்களில் சில கட்டுப்பாடுகளுடன் சந்தை மற்றும் பிற வியாபாரங்கள் இயங்க அனுமதியளித்தது மாநிலங்களில் பொருளாதார சிக்கலை சமாளிக்க வழிவகை செய்கிறது. ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து மே 1ஆம் தேதிக்குள், 170 சிவப்பு மண்டலங்கள் 130ஆக குறைந்துள்ளது. ஆனால் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை 284-க்கு உயர்ந்துள்ளது. இதே வேளையில், பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இது கரோனா பரவலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பதினைந்து நாட்களாக தினமும் ஆயிரத்தை தாண்டியிருந்தது, அது சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்திருக்கிறது. கரோனா பரவலின் வீரியத்தை குறைக்க இந்திய அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு சற்று உதவியிருக்கிறது, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நிலை நமக்கு இல்லை.
இந்திய அரசாங்கம் தனது 419 பரிசோதனை நிலையங்களின் வாயிலாக ஒரு நாளுக்கு 75,000 பரிசோதனைகள் மோற்கொள்கிறது. தற்போது அரசாங்கத்தால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொருவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.