மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு முன்பாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பெரும்பான்மையில்லாத அரசு ஆட்சி அமைத்தது. பெரும்பான்மையில்லாத காரணத்தால், 80 மணி நேரத்தில் ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் ஃபட்னாவிஸ். பாஜகவின் இந்த முதிர்ச்சியற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிவசேனாவின் தலைமையிலான ஆட்சியிலிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் காப்பாற்றவே ஃபட்னாவிஸ் 80 மணி நேரம் முதலமைச்சராக இருந்தார் என புது விளக்கம் ஒன்றை அளித்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஆனந்த் குமார் ஹெக்டே. முதலமைச்சராக இருந்த 80 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசுக் கருவூலத்திலிருந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசுக்குத் திரும்ப அளித்து சிவசேனா தலைமையிலான அரசிடம் பணத்தைக் காப்பாற்றியதாக ஹெக்டே கூறிய கருத்து புயலைக் கிளப்பியது.