தமிழ்நாடு

tamil nadu

கரோனாவிலிருந்து மீண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவரின் அனுபவம்!

புதுச்சேரி: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த ஜிப்மர் மருத்துவமனை இளம் மருத்துவர் மிதுனாவின் அனுபவம் குறித்து பார்க்கலாம்.

By

Published : Aug 1, 2020, 10:01 AM IST

Published : Aug 1, 2020, 10:01 AM IST

zimmer-hospital-doctor
zimmer-hospital-doctor

இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் செய்திக்குறிப்பில், "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கரோனா பிரிவில் பணிபுரிந்துவந்த மருத்துவர் மிதுனா என்பவருக்கு மே 30ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்தான் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவர் ஆவார். தற்போது அவர் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

இநநிலையில், அவர் கரோனாவிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு கரோனா பாதிப்பில்லை என்ற வார்த்தையை கேட்க செல்போன் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், அதற்கு எதிர்மறையாக நடந்தது. என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக மே 30ஆம் தேதி மாறியது. என் மனதில் அதிக பயம், உதவியற்றத்தன்மை கொண்ட உணர்வு தோன்றியது.

ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்புக் கவச உடை அணிந்த மருத்துவப் பணியாளர்கள் என்னை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வருவார்கள் என்ற பயம் எனக்கு அதிகமாக இருந்தது. எனது மருத்துவக் கடமை அன்றுடன் முடிவடைந்தது. எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் எனக்குள் தைரியத்தை கொண்டுவர முயற்சி எடுத்தேன். என்னுடன் தங்கியிருந்த தோழிகளின் ஆதரவு மட்டுமே என்னை சகஜ நிலைக்குத் திரும்ப உதவியது.

என்னால் எனது நண்பர்களுக்கும், என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற பயம் எனக்குள் தொற்றிக்கொண்டது.
எனது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் அதைக் கேட்டு கலக்கமடைவார்கள் எனும் கவலையானது, பெற்றோரிடம் தெரிவிப்பதை தடுத்தது.

உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் யாருக்காவது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், தயவுசெய்து அவர்களிடம் உங்களுக்கு எப்படி வைரஸ் பாதிப்பு வந்தது, உன்னால் எத்தனை பேருக்கு பரவியது, போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்.
அது பாதிக்கப்பட்டவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் இனம் புரியாத குழப்பத்துடனும், பயத்துடனும் இருப்பார்கள். அவர்களிடம் ஆதரவாக பேசினாலே, வைரஸ் பாதிப்பு விரைவில் சரியாகிவிடும். எனக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டபோது, எனது வீட்டிற்கு அருகாமையிலிருந்தவர்கள் பிரச்சினை செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் கைதட்டியும் மற்றும் விளக்கு ஏற்றியும் மருத்துவ துறையினரை கொண்டினர்.

அதே நேரத்தில் மனிதாபிமானம் சாகவில்லை என்பதையும் உணர்ந்தேன். நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் ஆதரவாக இருந்தார். வீட்டிற்கு திரும்பி வந்தபோது அக்கம்பக்கத்து சிலர் நலம் விசாரித்தனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா வார்டில் பணியைத் தொடங்கினேன்.

உண்மையில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஹாய் என்று சொல்வதைக் கூட நிறுத்தினர். நன்றாக இருக்கிறாயா? என்று கேட்கமாட்டார்கள். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தமாட்டார்கள். பயத்துடன் விலகிச் செல்வார்கள். இருந்தாலும் பரவாயில்லை, அது அவர்களுடைய அச்சத்தின் வெளிப்பாடு.

மீண்டும் கரோனா வார்டில் பணியாற்ற நான் பயப்படவில்லை என்று சொல்ல முடியாது. வயிற்றில் பயம் கலந்த உணர்வு உள்ளது. அது மனிதர்களின் இயல்பு. ஆனால் எனக்குள் இருக்கும் உந்துதல் சக்தி அந்தப் பயத்தை போக்க உதவுகிறது" என மருத்துவர் மிதுனா கூறியுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்" - மனநல மருத்துவர் பிரத்யேக பேட்டி

ABOUT THE AUTHOR

...view details