இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர், அதனைச் சுற்றியுள்ள பல தொழிற்சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இது அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தினசரி கூலிகளின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.
நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அவர்களது வசித்து வந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகையை செலுத்த முடியாமல் இருந்த இடத்தைவிட்டு காலி செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த இந்த தொழிலாளர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது.