"உலகமே உடல், டெல்லி அதன் ஆன்மா" என்றார் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல உருது கவிஞர் மிர்சா காலிப். டெல்லி ஒரு இடமாகவும், ஒரு கற்பனையாகவும் எப்போதும் முக்கியத்துவத்துடன் இருக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவர். அவரது அர்த்தம் பொதிந்த வரிகள் எந்த அளவுக்கு நிதர்சனமானவை என்பதை தற்போதைய டெல்லி சட்டபேரவைத் தேர்தல், மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது.
சமூக – அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல், டெல்லி அளவிலும், தேசிய அளவிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. நீண்ட காலமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவது ஒருபுறம் இருக்க, குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை போராடுவதற்காக வீதியில் தள்ளி இருக்கிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளூர் பிரச்னைகளை மையமாகக் கொண்டது என முன்னிறுத்தப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும். டெல்லி தேர்தல் இம்முறை கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பது ஏன்?:
டெல்லியில் தேர்தல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஏனெனில் நாட்டின் தலைநகரான டெல்லி, அரசியலின் மையமாக இருக்கிறது. அதோடு, ஊடகங்களுக்கு மிகவும் நெருக்கமான களமாகவும் டெல்லி திகழ்கிறது.
டெல்லி தேர்தல் வெறும் குறியீடு மட்டுமல்ல. இந்திய மக்கள் வாக்களிப்பதில் எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், மாற்று அரசியலுக்கான வாய்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தக்கூடியது அது.
மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் பிரித்துப் பார்த்து வாக்களிக்கக் கூடியவர்கள் டெல்லி வாக்காளர்கள் என அடிக்கடி கூறப்படுவதுண்டு. வாக்காளர்களின் விருப்பங்கள் இங்கு தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடும். அதாவது, தேசிய பிரச்னைகளையும் மாநில பிரச்னைகளும் தனித்தனியாக பார்ப்பவர்கள் அவர்கள்.
டெல்லி மக்களின் இந்த எண்ண ஓட்டம், ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஏனெனில், அக்கட்சி உள்ளூர் பிரச்னைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. தனது அரசின் சாதனைகளை முன்வைத்தே அர்விந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
டெல்லி மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதில் பாஜக தீவிரம் காட்டியது. மத்திய அரசு எவ்வாறு சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை அது வாக்காளர்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. அதோடு, ஆம் ஆத்மியும், காங்கிரசும் ‘தேசிய நலன்களில்’ சமரசம் செய்து கொள்வதாகவும் அது குற்றம் சாட்டியது. மேலும், மத்தியிலும் டெல்லியிலும் ஒரே கட்சியின் ஆட்சி இருக்குமானால் தடையற்ற வளர்ச்சியை டெல்லி பெறும் என்ற கருத்தையும் பாஜக தொடர்ந்து முன்வைத்தது.
அடையாள அரசியல் இல்லை; வளர்ச்சி அரசியல் மட்டுமே:
மற்று அரசியலை முன்வைப்பவர்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால், தேர்தல் அரசியல் என்பது ஒரு எண்ணிக்கை விளையாட்டு என்பதுதான். ஆட்டத்தின் முடிவில் யார் எந்த எண்ணிக்கையை பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
வளர்ச்சி என்பது ஒருவகையான மாயச் சொல். பல்வேறாக பிரிந்துள்ள மக்களை ஒருங்கிணைக்க இந்த சொல் அவசியமானதாக இருக்கிறது. ஏழ்மையை ஒழிப்போம், எல்லோருமாகச் சேர்ந்து எல்லோருக்குமான வளர்ச்சியை எட்டுவோம் போன்ற முழக்கங்கள் இந்த கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.
இந்திய அரசியலை பாழ்படுத்தும் மூன்று முக்கிய தீமைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகத்தின் தீவிர முயற்சியின் காரணமாக உருவான கட்சி ஆம் ஆத்மி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அந்த மூன்று என்னென்ன?:
பணபலம், ஆள்பலம், குடும்ப அரசியல் எனும் மூன்று தீமைகளை அரசியலில் இருந்து ஒழிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. புதிதாக துவக்கப்பட்ட அக்கட்சிக்கு 2010ம் ஆண்டில் கிடைத்த அற்புதமான வெற்றி, இந்திய தேர்தல் அரசியல் பணத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையை மாற்றி, அது அர்ப்பணிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டது என்ற நிலையை ஏற்படுத்தியது.
சேவையை அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஆம் ஆத்மி முன்வைத்தது. அதில், அந்த கட்சிக்கு எந்த அளவு வெற்றி கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்திற்கான விதையை அது தூவி உள்ளது.
இதில், முக்கியம் என்னவென்றால், தனது அரசின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளின் மூலம், சமூகத்துடன் ஒரு கூட்டணியை ஆம் ஆத்மி வெற்றிகரமாக நிறுவியுள்ளது. சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிளவுகளைத் தாண்டி வண்ணமயமான ஒரு கூட்டணியை அது உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் வழக்கமான ஜனரஞ்சக அரசியலுக்கு அப்பாற்பட்டது அது.