தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஜூலை 29ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும், மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 'எக்ஸிட் தேர்வு' ரத்து செய்யப்பட வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கைவைத்தன.
ஆனால், தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இதன் காரணமாக மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் எனவும், எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மருத்துவர்கள் நாடு முழுவதும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கினர்.
இந்த மசோதா திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.