தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனியார் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய முக்கியச் சீர்திருத்தங்கள்! - தனியார் கல்வி

இந்தியாவில் தனியார் கல்வித் துறையில் ஏற்பட வேண்டிய முக்கியச் சீர்திருத்தங்கள் குறித்து எழுத்தாளர் குர்ச்சரன் தாஸ் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

Indian Education system
Indian Education system

By

Published : Jul 13, 2020, 1:56 PM IST

‘சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று மகாபாரதத்தில் விதுரர் கூறுகிறார். அவர் நயவஞ்சகர்களுக்கு எதிராக த்ரிதராஷ்டிர மன்னருக்கு இதை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அவர் போலித்தனம் மற்றும் பல தவறான கட்டுக்கதைகள் வேரூன்றியுள்ள இந்தியாவின் கல்வி நிறுவனங்களை இதில் எளிதாகக் குறிப்பிட்டிருக்கலாம்.

கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய உலகில் இந்தப் போலித்தனத்திற்குச் சவால் ஏற்பட்டுள்ளது. அதில் திறமையான, வேகமான மற்றும் புதுமையானவர்கள் மட்டுமே பிழைத்திருப்பார்கள். கல்வி என்பது பொதுநலனுடன் சேவைசெய்ய அரசால் மட்டுமே வழங்கப்பட வேண்டும், என்பது நமது கட்டுக்கதைகளில் ஒன்று. முதலாவதாக இந்தப் போலித்தனமான பொய், லாபம் ஈட்டுவதைத் தடைசெய்கிறது.

ஆனால், பலரும் அறிந்தபடி உண்மையில் கல்வித்துறையில் பலரும் லாபம் ஈட்டுகிறார்கள்; இரண்டாவது, தனியார் பள்ளிகள் நடத்த லைசென்ஸ் ராஜ்ஜில் இருந்த நடைமுறைகளைத் தனியார் பள்ளிகள் அறிந்தே இருப்பார்கள்.

முன்னேறிய நாடுகளில் கல்வி என்பது அரசு மட்டுமே வழங்குகிறது என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டது. உண்மை என்னவென்றால், அமெரிக்கா, இங்கிலாந்து, சோசலிச ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபத்திய கல்விச் சீர்திருத்தங்கள் அனைத்தும் தனியார் கல்வி முயற்சியை ஊக்குவித்துள்ளன. வளர்ந்த நாடுகளிலுள்ள பல பள்ளிகள் தனியாரால் நடத்தப்பட்டடு/பொது நிதியளிக்கப்படும் மாதிரியை நோக்கி நகர்கின்றன.

இந்தக் கட்டுக்கதையைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் இந்தியா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. ஆனால் விளைவுகளோ பரிதாபமானது. 74 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வதேச பிசா (PISA) சோதனையில் இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானுக்கு முன்னால், 73ஆவது இடத்தைப் பிடித்தனர். ஐந்தாம் வகுப்பில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடிந்தது; ஐந்தாம் வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கூட்டல் கணக்குகளைக்கூட செய்ய முடியவில்லை.

சில மாநிலங்களில், பத்து விழுக்காட்டிற்கும் குறைவான ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் (TET) தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில், நான்கு ஆசிரியர்களில் மூன்று பேருக்கு ஐந்தாம் வகுப்பு பாடத்திலுள்ள கணக்கைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. சராசரியான அரசுப் பள்ளியில், நான்கு ஆசிரியர்கள் சட்டவிரோத விடுப்பில் இருப்பதாகவும் இருவரில் ஒருவர் மாணவர்களுக்கு பாடங்களை முறையாகக் கற்பிப்பதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2010-11 முதல் 2017-18 வரை 2.4 கோடி குழந்தைகள் அரசுப் பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டதாக அரசின் DISE தரவுகள் தெரிவிக்கிறது. இன்று இந்தியாவின் 47 விழுக்காடு குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். அதாவது, இந்தியாவில் தனியார் பள்ளி முறையில் 12 கோடி குழந்தைகள் படிக்கிறார்கள். உலகளவில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கிறோம்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காடு பெற்றோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவும், 45 விழுக்காடு பெற்றோர்கள் 500 ரூபாய்க்கு குறைவாகவும் பள்ளிக்குக் கட்டணம் செலுத்துகின்றனர். இது தனியார் பள்ளிகள் பணக்கார மக்களுக்கு மட்டுமே என்ற மற்றொரு கட்டுக்கதையை தகர்க்கிறது.

அரசுப் பள்ளிகள் எந்த வேகத்தில் காலியாகின்றன என்பதன் அடிப்படையில், நமக்கு கூடுதலாக 1,30,000 தனியார் பள்ளிகள் தேவைப்படுகின்றன. தங்கள் குழந்தையை ஒரு ஒழுக்கமான பள்ளியில் சேர்க்க காத்திருக்கும் பெற்றோரின் நீண்ட வரிசைகளைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. நல்ல தனியார் பள்ளிகளின் பற்றாக்குறைக்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் - உரிமம் பெறுதல்:

ஒரு நேர்மையான நபர் பள்ளி தொடங்குவது என்பது மிகவும் கடினம். அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து ஒரு பள்ளியை ஆரம்பிக்க 35 முதல் 125 அனுமதிகள் தேவைப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு அனுமதிக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

அதிலும் (அந்த இடத்தில் ஒரு பள்ளி அவசியம் என்பதை நிரூபிக்க) அத்தியாவசிய சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு மிகவும் அதிகமான லஞ்சம் கொடுக்க வேண்டும். மேலும், இந்த மொத்த செயல்முறையும் முடிய ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம்.

இரண்டாவது காரணம் - நிதிநிலைமை:

பள்ளியை நடத்துவது என்பது இனியும் லாபகரமானதல்ல. ஏழை மாணவர்களுக்குக்கு 25% இடங்களை ஒதுக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு அரசு கட்டளையிட்டபோது, ​​கல்வி உரிமைச் சட்டத்தில் சிக்கல் தொடங்கியது. இது ஒரு நல்ல யோசனையாக இருந்தாலும் மோசமாகச் செயல்படுத்தப்பட்டது.

25% இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசுகள் முறையாக வழங்காததால், 75% கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கான கட்டணம் அதிகரித்தது. இது பெற்றோரிடமிருந்து எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

மேலும் பல மாநிலங்கள் கல்விக் கட்டணங்கள் மீது கட்டுப்பாட்டை விதித்ததால் படிப்படியாக பள்ளிகளின் நிதி நிலையைப் பலவீனமாக்கியுள்ளது. பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்கு சில பொருளாதார மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இது தரம் குறைவதற்கு வழிவகுத்தது. இந்த கரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சில பள்ளிகள் மூடப்படலாம்.

மூன்றாவது காரணம்- தேசிய போலித்தனம்:

ஒரு நேர்மையான நபர் பள்ளியைத் தொடங்க முடியாததற்குமூன்றாவது காரணம் தேசிய போலித்தனம். ஒரு தனியார் பள்ளி லாபம் ஈட்டுவதைச் சட்டம் தடை செய்கிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதைத்தான் செய்கின்றன.

உலகின் முதல் பத்து பொருளாதாரங்களில் ஒன்பது லாப கல்வியை அனுமதிக்கின்றன. இந்தியாவில் மட்டும் இல்லை. இந்தப் போலித்தனத்தைக் கைவிட இது சரியான தருணம். லாப நோக்கற்ற என்பதிலிருந்து லாப துறைக்கு இந்த ஒற்றை மாற்றம், ஒரு புரட்சியை உருவாக்கக்கூடும். அதன் மூலமாக வாய்ப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தும் முதலீடுகள் கல்வித் துறையில் அதிகரிக்கும்.

இதன்மூலம் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்படும். 1991க்குப் பிறகு தண்ணீர், மின்சாரம் மற்றும் இணையத்திற்கு பணம் செலுத்துவதைப் போலவே, ஒரு சிறந்த கல்விக்கும் பெற்றோர்கள் பணம் செலுத்துவார்கள். இந்தப் புரட்சிக்கு வேறு சில நடவடிக்கைகள் தேவைப்படும். நேர்மையான தனியார் பள்ளி கல்வியைத் தொடங்க லைசென்ஸ் ராஜ் முறை அகற்றப்பட வேண்டும். இரண்டாவதாக, முன்னேறிய நாடுகளில் இருப்பது போன்ற தன்னாட்சி என்பது பள்ளிகளுக்குத் தேவைப்படும்.

கட்டுப்பாடு மற்றும் சம்பளம், கட்டணம் மற்றும் பாடத்திட்டத்தின் சுதந்திரம் இருந்தால் மட்டுமே பள்ளிகள் கோவிட்-19 தொற்றுக்கு பிறகு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும். ஒரு துடிப்பான தனியார் பள்ளித் துறை இந்தியாவுக்கு சிறந்த பலன்களை வழங்கும். அதுவும் அரசுப் பள்ளிகளின் செலவில் மூன்றில் ஒரு பங்கில் இதைச் செய்யும். அரசு ஆசிரியர் சம்பளம் தொடர்ந்து உயர்ந்துவரும் சூழலில், தனியார் பள்ளி என்பது சமுதாயத்திற்கு குறைந்த செலவில் சிறந்த சேவையை வழங்கும்.

2017-18ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு இளநிலை ஆசிரியரின் ஆரம்ப சம்பளம் 48 ஆயிரத்து 918 ரூபாய். இது அம்மாநிலத்தில் ஒரு தனிநபர் வருமானத்தைவிட பதினொரு மடங்கு அதிகம். இதேபோல சமீபத்திய கல்விக் கொள்கையும் தோல்வியடையும் என்று எதிபார்க்கலாம்.

இந்தியாவின் கல்விச் சீர்திருத்தம் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தனியார் பள்ளிகளுக்கு தன்னாட்சி வழங்குதல் ஆகியவையே அது. இந்த நோக்கத்திற்காக, அரசு பின்வரும் தனது சொந்த செயல்பாடுகளை, அதாவது கல்வியை ஒழுங்குபடுத்துதல், அரசுப் பள்ளிகளை நடத்துதல் போன்றவற்றைக் கைவிட வேண்டும்.

கரோனாவுக்கு பிந்தைய உலகிற்கு தயாராவதற்கு இந்தியாவுக்கு இன்னும் புதுமையான பள்ளி தேவைப்படும். நமது தனியார் பள்ளிகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தால் மட்டுமே இது நடக்கும். இந்த நடவடிக்கைகள் போலித்தனத்தைக் கைவிடவும், நம்மை மேலும் நேர்மையாக மாற்றவும் உதவும்.

இதையும் படிங்க:டெல்லியில் படிப்படியாக குறையும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details