கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு விதிகள் மீறப்பட்டு வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மத்திய அரசு கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்பியிருந்தது.
இக்குழு நேற்று கொல்கத்தா, ஜபல்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்த நிலையில், ”மேற்கு வங்க மாநில அரசுக்கு இக்குழு வருவது முன்பே தெரிவிக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.