உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் நிலையில், டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடற்றவர்களுக்கும் கோவிட் -19 கண்டறிதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை வழங்குமாறு வழக்குரைஞர் கௌரவ் குமார் பன்சால் சார்பில் பொது நல வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுவில், " மன நலம் குன்றியவர்கள், வீடற்ற, ஆதரவற்ற நபர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்வதில் முதன்மை சிக்கலாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கைப்பேசி போன்றவை இல்லாதது ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தேசிய வழிகாட்டுதல்களில் கட்டாய நிபந்தனைகளாக இவை உள்ள காரணத்தால் மேற்கண்டவர்களிடையே கண்டறிதல் சோதனை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றை பரிசோதனைகளை மேற்கொள்ளும் இந்திய சுகாதார ஆராய்ச்சித் துறை, டெல்லி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை கட்டாயமாக்கி உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
சந்தேகத்திற்கிடமான மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற மக்கள், ஆதரவற்ற நபர்கள் என அனைவரும் இந்நாட்டு மக்கள் தான். அவர்கள் அனைவரும் கரோனா கண்டறிதல் உள்ளிட்ட அனைத்து வகையான சுகாதார சேவைகளைப் பெற தகுதியானவர்கள் தான். ஏனெனில், இதுபோன்ற நபர்கள் சராசரியான மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தொற்றுநோய்களின் அபாயங்களுக்கு அதிகமாக உள்ளாகின்றனர்.
வீடற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைத்து வகையிலும் புறக்கணிக்கப்பட்ட கடைநிலை மக்களாகவே உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அனைத்து வகையான இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களில் முதன்மையாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளாக உள்ளனர். எனவே, இந்த எளிய மக்களுக்கு சிறப்பு கவனிப்பும், உதவிகளும் தேவைப்படுகிறது. அரசும், சமூகமும் அதன் ஆதரவுக் கரங்களை இவர்களுக்கு நீட்ட வேண்டும்.