தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரேபிட் கிட்கள் தரமற்றதா? - சீனா விளக்கம் - China latest news

டெல்லி: முறையாகப் பயன்படுத்தப்படாததால் ரேபிட் கிட்களில் தவறான முடிவுகள் வந்திருக்கலாம் என்றும் சீனா பொருள்கள் மீது தரமற்றது என்று முத்திரை குத்துவது பொறுப்பற்ற செயல் என்றும் சீனா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

China on ICMR's decision
China on ICMR's decision

By

Published : Apr 28, 2020, 4:38 PM IST

Updated : Apr 29, 2020, 9:15 AM IST

இந்தியாவில் கரோனா தீநுண்மி பரவலின் நிலை குறித்து கண்டறிய ஏதுவாக சீனாவின் குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக், ஜுஹாய் லிவ்ஸன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு ரேபிட் கிட் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்தது.

இருப்பினும் ரேபிட் கிட் சோதனைக் கருவிகளில் முடிவுகள் குழப்பம் அளிக்கும்வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து நடைபெற்ற விசாரணையை அடுத்து ரேபிட் கிட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தியது.

மாநில அரசுகள் தங்களிடமுள்ள ரேபிட் கிட் கருவிகளை மத்திய அரசுக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கேட்டுக்கொண்டது. ரேபிட் கிட் கருவிகள் அந்த நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பப்படும் என்றும் ஆர்டர் ரத்துசெய்யப்படுவதால் இந்தியாவுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இந்தக் குற்றச்சாட்டிற்கு சீனா பதிலளித்துள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ராங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ரேபிட் கிட் சோதனைக் கருவிகள் குறித்த மதிப்பீட்டு முடிவுகள் குறித்தும் அதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எடுத்துள்ள முடிவு குறித்தும் நாங்கள் பெரும் கவலை கொண்டுள்ளோம். சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவப் பொருள்களின் தரத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறோம்.

சிலர் சீனா பொருள்கள் மீது தரமற்றது என்று முத்திரை குத்தும் முன்முடிவுகளுடன் எங்கள் பொருள்களை அணுகுவது முற்றிலும் நியாயமற்ற பொறுப்பற்ற செயல்.

இருப்பினும் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவின் இந்தப் போராட்டத்திற்குச் சீனா ஆதரவாக இருக்கும். இந்தத் தீநுண்மி தொற்றிலிருந்து இரு நாட்டைச் சேர்ந்த மக்களையும் காக்க நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளோம்.

உண்மையான நிலை என்ன என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடனும் ஏற்றுமதி செய்த இரு நிறுவனங்களுடனும் தொடர்பில் உள்ளோம். இந்த இரு நிறுவனங்களிடமிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் ஐரோப்பா, ஆசிய, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிறப்பாகச் செயல்படுவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ரேபிட் கிட் கருவிகளைச் சேமிக்கவும், பயன்படுத்தவும், ஓர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்லவும் கடுமையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது தவிர ரேபிட் கிட் கருவிகளில் கூறப்பட்டுள்ளதைப் போல அவற்றை உபயோகிக்கவில்லை என்றால் முடிவுகள் தவறாகலாம்.

கரோனோ தீநுண்மி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினால் மட்டுமே இந்தப் பெருந்தொற்றை வெல்ல முடியும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்தியாவுக்கு உதவவும் பல மருத்துவப் பொருள்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.

கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து கூடிய விரைவில் வெளியே வர இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவே உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!

Last Updated : Apr 29, 2020, 9:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details