தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பிரேசில் அதிபர் பங்கேற்கும் விழாவில் நானா?’ - மோடிக்கு கடிதம் எழுதிய எம்பி - குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

டெல்லி: முற்றிலும் வலதுசாரி கருத்துகளைக் கொண்ட பிரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள எம்பி பினோய் விஸ்வம், விழா அழைப்பிதழை நிராகரித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

CPI MP declines Republic Day invite, says Bolsonaro's actions against Constitution's ethos
CPI MP declines Republic Day invite, says Bolsonaro's actions against Constitution's ethos

By

Published : Jan 25, 2020, 1:36 PM IST

நாடு முழுவதும் நாளை (ஜனவரி 26, 2020) 71ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் நாளை சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் வேறு நாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்கள். கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தாண்டு நடைபெறும் விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

இதனிடையே, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்த போல்சனாரோ இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும் பல முக்கிய ஒப்பந்தங்களில் இவர் கையெழுத்திடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதிக்கவுள்ளதாக இந்தியாவுக்கான பிரேசில் நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ - பிரதமர் நரேந்திர மோடி (File Photo)

இவ்விழாவில் கலந்துகொள்ள தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலங்களவை உறுப்பினரான பினோய் விஸ்வம்முக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மதவெறி, தன்பாலின ஈர்ப்பாளர்கள் வெறுப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட ஒரு தலைவரை (ஜெய்ர் போல்சனாரோ) குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது வியப்பாக உள்ளது. உலகளவில் அவரின் நடவடிக்கைகள், குடியரசு தின விழாவில் நாம் கொண்டாடும் அரசியலமைப்பின் மாண்புக்கு முற்றிலும் எதிரானது. இரு மாதங்களுக்கும் மேலாக அமேசான் காடுகள் எரிந்து நாசமாகியதை கண்டுகொள்ளாமல் செயல்பட்ட பிரேசில் அதிபர் உலக சுற்றுச்சூழலுக்கு எண்ணற்ற சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்” என்று விஸ்வம் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

மேலும், “மற்றொன்றையும் நினைவுகூர விரும்புகிறேன். இந்திய கரும்பு விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத்துக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO) தடைகோரியவர்தான் இந்த போல்சனாரோ. எனவே அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, குடியரசு தின விழா அழைப்பிதழை நான் நிராகரிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

பினோய் விஸ்வம் இவ்வாறு கூறுவதற்கு காரணம் என்ன?

பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினரானதிலிருந்து சர்ச்சை நாயகராகவும் மாறினார் ஜெய்ர் போல்சனாரோ. முற்றிலும் வலதுசாரி கருத்து கொண்ட போல்சனாரோ, ஆணாதிக்க சிந்தனை, தேசியவாதம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் வெறுப்பு போன்ற பிற்போக்கு சிந்தனைகளை உதிர்த்து அவ்வப்போது மக்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டார். ஒருமுறை நாடாளுமன்ற விவாதத்தின்போது மற்றொரு பெண் உறுப்பினரிடம் பேசிய இவர், ”நான் உன்னை பாலியல் வன்கொடுமை செய்யமாட்டேன். ஏனென்றால், நீ அதற்கு தகுதியான பெண் இல்லை” என சர்ச்சைக்குரிய முறையில் கூறியுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

இதுமட்டுமல்லாமல், ஹிட்லர், முசோலினி ஆகியோர் சர்வாதிகாரியாக இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் ஊழல்வாதிகள் அல்லர் என்ற அரிய கருத்தையும் போல்சனாரோ கூறியுள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களையும் இவர் விட்டுவைக்கவில்லை. போல்சனாரோவுக்கு 4 மகன்களும் 1 மகளும் உள்ளனர். ”என் மகன்களில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்தால், அவர் விபத்தில் மரணமடைந்தாலும் எனக்கு கவலையளிக்காது” என்று கூறி வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

நான்கு மகன்களுக்குப் பின் ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்ததை இவ்வாறு கூறி தன் ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துகிறார் போல்சனாரோ: “எனக்கு 4 மகன்கள் பிறந்தனர்; நான் கொஞ்சம் பலவீனமாக இருந்துவிட்டதால், ஐந்தாவதாக எனக்கு மகள் பிறந்துவிட்டாள்”

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

இதுபோன்ற வலதுசாரி தத்துவங்களை அவர் போற்றுவதால்தான் கேரள எம்பி பினோய் விஸ்வம் அவரைத் தூற்றுகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதன்மூலம் பிரேசில் அதிபரை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி அழைத்தது இடதுசாரி தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்க இருக்கும் பிரேசில் அதிபர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details