கோவிட்-19 (கரோனா) வைரஸ் தொற்று தற்போது சீனாவில் குறைந்து வந்தாலும் இத்தாலி, அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கோவிட் 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவேண்டும். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரியவில்லை" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கபில் சிபில் கூறுகையில், "இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் கடமை உள் துறை அமைச்சருக்கு உள்ளது" என்று கூறினார்.