உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 57 ஆயிரத்து 29ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 019 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 57 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 94.93 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 33 ஆயிரத்து 136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 546 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.