உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முழுமையான ஊரடங்கு உத்தரவு மே3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் பகுதிகள் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற முறையில் சந்தேகத்துக்குரிய நிலையில் காஷ்மீரைச் சேர்ந்த 2,157 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,685 பேர் வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர். 328 பேர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் உள்ளனர். 1200க்கும் மேற்பட்டோர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். தொற்று பாதிப்பு இருக்கலாம் என சந்தேகப்படக் கூடியவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 168 பேர் தங்களது 28 நாள் கண்காணிப்புக் காலத்தை முடித்துள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் யூனியன் பிரதேசத்தின் மக்களுக்கு உதவ சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான முதல் கோவிட் -19 அவசர அழைப்புதவி மையம் நேற்று (ஏப்ரல் 17) தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஸ்ரீநகர் துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறுகையில், “பெண்கள், முதியவர், பிறரின் உதவிகளை எதிர்பார்க்கும் நோயாளிகளுக்கு உடனடியாக உதவியை வழங்க கோவிட் -19 அவசர அழைப்புதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் பணியாற்ற 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது முதன்மையாக ஸ்ரீநகர் மக்களுக்கு உதவ தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அவதி: மக்களின் குறைகளைத் தீர்க்க ஸ்ரீநகரில் அழைப்புதவி மையம்! இதுவே ஜம்மு-காஷ்மீரின் முதல் கோவிட் -19 அவசர அழைப்புதவி மையம் ஆகும். இந்த அழைப்புகளின் பதிவும் பராமரிக்கப்படும். இதன் மூலம், அழைப்பவர் தேவை நிறைவடைந்ததா? இல்லையா? என்பதை நாங்கள் அறிவோம். கோவிட் -19 அவசர அழைப்புதவி மைய உதவியைக் கோருபவர்கள் 6006333308 என்ற எண்ணை அழைக்கலாம்”, என தெரிவித்தார்.
இதையும் படிங்க :பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது!