தமிழ்நாடு

tamil nadu

கரோனாவுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் - பினராயி விஜயன்

By

Published : Jul 28, 2020, 1:23 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் கூடுதலாக 810 கோவிட் முதல்-நிலை சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

உலக பெருந் தொற்றுநோயான கரோனாவால் கேரளாவில் நேற்று (ஜூலை 27) 702 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 727ஆக உயர்ந்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கேரளா முழுவதும் 495 இடங்களை ஹாட்ஸ்பாட் ஆக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறுகையில், "கரோனாவுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும். கரோனா தொற்று தற்போது சுகாதார பிரச்னையாக மட்டுமல்லாது சமூகம், பொருளாதார பிரச்னையாகவும் மாறிவிட்டது. பரவலைக் கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொற்று நோய்க்கான சிகிச்சை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

இந்த தொற்று நோய் சிகிச்சைக்காக தற்போது 101 கோவிட் முதல்-நிலை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 12 ஆயிரத்து 801 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 45 விழுக்காடுகள் தற்போது நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூடுதலாக மாநிலம் முழுவதும் 810 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 30 ஆயிரத்து 598 படுக்கை வசதியுடன் 229 மையங்கள் தயாராக உள்ளன. அதற்கடுத்தப்படியாக 36 ஆயிரத்து 400 படுக்கை வசதியுடன் 480 மையங்கள் தயார்படுத்தி வருகிறது. இந்த மையங்களில் தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். இந்த மையங்களில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரங்குகள் உள்ளிட்டவைகளில் இந்த மையங்கள் செயல்படுத்த அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக 1,145 மனநல மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 17 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மூலம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி இறந்தால், அவர்களின் உடல் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி தகனம் செய்யப்படுகிறது. இறந்த உடல்களில் இருந்து தொற்று பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details