அரசு பங்களாவை காலி செய்வாரா பிரியங்கா காந்தி? - அரசு பங்களா
![அரசு பங்களாவை காலி செய்வாரா பிரியங்கா காந்தி? பிரியங்கா காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7851045-1020-7851045-1593610989041.jpg)
20:42 July 01
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பபெறப்பட்டதால், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அவருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுவந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திரும்பபெறப்பட்டது.
இந்நிலையில், எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பபெறப்பட்ட காரணத்தால் டெல்லி லோதி சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து வெளியான உத்தரவில், "இதன் காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட அரசு இடத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது எஸ்பிஜிக்கு பதிலாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம் தொடரும் என கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.