தமிழ்நாடு

tamil nadu

#chandrayaan-2 update விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிந்தது!

By

Published : Sep 21, 2019, 8:34 AM IST

Updated : Sep 21, 2019, 9:52 AM IST

#chandrayaan-2 update நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவினால் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது.

vikram lander

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது.

சந்திரயான்-2 விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்களை வைத்து செலுத்த முடிவு செய்யப்பட்டது.

அவை ஆர்பிட்டர் (Orbiter), லேண்டர் (Lander), ரோவர் (Rover). ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-III-ன் மூலம் செலுத்தப்படும் என்றும், சந்திரயான்-2 பூமியிலிருந்து செலுத்தப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும் எனக் கூறப்பட்டது.

அதன் பின்னர் லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லேண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும் என்றும், நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தும் எனவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இஸ்ரோ டிவிட்

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்யும் நோக்கில் இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை 24ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக விலகிய சந்திரயான் 2, ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது. இதனையடுத்து, 5 கட்டங்களில் படிப்படியாக சந்திரயான் 2 நிலவை நெருக்கிச் சென்றது.

சந்திரயான் செயல் விளக்கப் புகைப்படம்

‘சந்திரயான் 2’ திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவிலுள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.

திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது.


இதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே நிசப்தமானது. பின்னர், பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.

சந்திரயான்-2 குறித்த விளக்கம்


சந்திரயான் 2-ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆனால் லேண்டரிலிருந்து எந்தத் தகவலை பெற முடியவில்லை. அதன் சிக்னலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இஸ்ரோ போராடி வந்த நிலையில், சிக்னலை தொடர்பு கொள்ளும் அமெரிக்க ஆய்வு நிறுவனமானா ‘நாசா’வின் முயற்சியும் தோல்விலேயே முடிந்தது.


இந்நிலையில், சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு நேற்றுடன் முடிந்தது.

இன்று முதல் சந்திரனில் 14 நாள் இரவுக் காலம் தொடங்கிவிடும் என்பதால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது இயலாததாகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

14 நாட்கள் நிலவில் சூரிய ஒளி இருக்காது என்பதால் மின் சக்தியை பெற இயலாது என்பதுடன் கடும் குளிர் நிலவும் என்பதால் மின்னணு பாகங்கள் செயலிழந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

விக்ரம் லேண்டர்

விக்ரம் லேண்டரை ஒருபுறம் தொடர்பு கொள்ளமுடியாவிட்டாலும், சந்திரயான் - 2 திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக இஸ்ரோ தன்னுடைய இணைய பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், “ஆர்பிட்டரில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் செயல்படுகிறது. ஆர்பிட்டர் தொழில்நுட்பத்தின் தொடக்க பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: 'சந்திரயான் 2 திட்டம் தோல்வியடையவில்லை' - பிர்லா கோளரங்க இயக்குநர் #EtvBharatExclusive

Last Updated : Sep 21, 2019, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details