தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2020, 4:05 PM IST

ETV Bharat / bharat

133 முறை பொய்யான வாக்குறுதி அளித்த மத்திய அரசு - அகிலேஷ் யாதவ்

லக்னோ: மத்திய அரசு 133 கோடி மக்களிடம் 133 முறை பொய்யான வாக்குறுதி அளித்துள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

Akhilesh Yadav
Akhilesh Yadav

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் தொழில் துறை அனைத்தும் முடக்கப்பட்டதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடு. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்கள் பயன்பெறுவர். அடுத்து இரண்டு மூன்று நாள்களில் இது குறித்த தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்" என்றார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்துவருகிறது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்பு ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். இப்போது ரூ.20 லட்சம் கோடிக்கு வாக்குறுதி அளித்துள்ளீர்கள். நீங்கள் 133 கோடி இந்தியர்களிடம் 133 முறை பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள்.

இந்தச் சமயத்தில் எப்படி ஒருவர் உங்களை நம்புவார்? இப்போது பொதுமக்கள் உங்கள் அறிவிப்பில் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கின்றன என்று கேட்கவில்லை, மாறாக எத்தனை தவறான வாக்குறுதிகள் இருக்கின்றன என்றுதான் கேட்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 3664 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் கோடியல்ல, வெறும் ரூ.4 லட்சம் கோடிதான் - கபில் சிபல் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details