தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிரா விவகாரம்: இறுதி உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

By

Published : Nov 25, 2019, 12:32 PM IST

டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தங்களது இறுதி உத்தரவை 24 மணிநேரத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

SC

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது.

நேற்று நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'பெரும்பான்மைக்கான ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜக தலைமையிலான ஆட்சிக்கு உள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநர் உத்தரவிட்ட பின் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என வாதிட்டார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 'பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியதால் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஃபட்னாவிஸ் ஆட்சியமைத்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெறுவது தாக்கரே, பவார் குடும்பங்களுக்கான அதிகார சண்டை, இதில் அரசுக்கு சம்பந்தமில்லை' என வாதிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என துஷார் மேத்தா கூறிய நிலையில், இந்த வாதத்திற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, 'இதுவரை உள்ள நடைமுறைப்படி நம்பிக்கை வாக்கெடுப்பானது 24 மணிநேரத்தில் நடத்தப்பட்டது. பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டுமே தவிர ஆளுநர் மாளிகையில் நடத்தக்கூடாது' என தெரிவித்தார்.

பின்னர், சிவசேனா சார்பாக வாதாடிய கபில் சிபல், 'குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கிவிட்டு அதிகாலை அவசர அவசரமாக ஆளுநர் பதவி பிராமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன?, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் 154 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு காணொலி மூலம் அவ்வாக்கெடுப்பை கண்காணிக்க வேண்டும்' என வாதிட்டார்.

காங்கிரஸ் சார்பாக ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, 154 எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்குக்கு தொடர்பில்லாததாகக் கூறி பிரமாணப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற்றார் சிங்வி.

காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் சிங்வி, 'அஜித் பவார் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் கடிதம் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க அளிக்கப்பட்டதல்ல. சட்டமன்ற கட்சித் தலைவராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆதரவுக் கடிதத்தை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை 24 மணிநேரத்துக்குள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குதிரை பேரத்துக்கு வழிவகுக்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்' என வாதிட்டார்.

இறுதியாக வாதிட்ட முகுல் ரோத்தகி ஆளுநரின் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர். இதன் காரணமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசுக்கு மேலும் 24 மணி நேரம் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க கடற்படை செயலர் பதவி நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details