தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2020, 6:12 PM IST

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு பரப்புரை: பெங்களூரு கல்லூரி மாணவிகளுடன் பாஜவினர் வாக்குவாதம்

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜவினர் நடத்திய பரப்புரையில், பெங்களூரு கல்லூரி மாணவிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

BJP workers create ruckus
BJP workers create ruckus

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், பெங்களூருவின் கோரமங்களா பகுதியிலுள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி சுவரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான சுவரொட்டி ஒன்றை உள்ளூர் பாஜகவினர் ஒட்டியுள்ளனர்.

இதற்கு அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் பரவிவரும் வீடியோவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது என்ற போஸ்டரை கல்லூரி சுவரில் அவர்கள் ஒட்டுகின்றனர். அதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

அப்போது பாஜக நிர்வாகி ஒருவர், "உங்களுக்கு குடிமக்களைப் பற்றிய கவலை இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். முதலில் நீங்கள் இந்தியாவைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காவிட்டால் நீங்கள் இந்தியர்களே அல்ல " என்று உரத்த குரலில் கத்துகிறார்.

மற்றொரு நிர்வாகி,"உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்கள் என்ன இந்த கல்லூரியின் முதல்வரா?" என்றும் அந்த மாணவிகளை நோக்கி கேட்கிறார். மேலும், சமூக வலைதளங்களில் பரவியுள்ள மற்றொரு வீடியோவில், பாஜகவினர் எங்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கே திரும்பச் செல்லுங்கள் என்றும் கோஷங்களை எழுப்புகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்க ரெட்டி, அக்கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், அதை கல்லூரிக்கு வெளியேதான் நடத்தவேண்டும். டெல்லி ஜேஎன்யு-வில் நடத்தப்பட்ட தாக்குதல் போல இங்கு நடைபெறவிடமாட்டேன்" என்று போராட்டகாரர்களை எச்சரித்தார்.

இதையும் படிங்க: ஜேஎன்யு வன்முறைச் சம்பவம் - விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்

ABOUT THE AUTHOR

...view details