மகாராஷ்டிராவின் ஜல்காவன் நகர் பூஷவால் பகுதியில் வசித்து வந்தவர் ரவீந்திரா காரத். பா.ஜ.க. உள்ளூர் தலைவரான இவரை வீட்டுக்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது குடும்பத்தினர் 3 பேர், அவரது மகனின் நண்பர் உட்பட 5 பேர் குண்டடிபட்டனர். அதன்பின்பும் ஆத்திரம் தீராத கொலையாளிகள், ஆயுதங்களால் கொடூரமான முறையில் அவர்கள்மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் ஆனால் சிகிச்சையின்போது அவர்கள் இறந்ததாகத் தெரிகிறது. நாட்டு கைத்துப்பாக்கி, கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் கொலைசெய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.