வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் மாநிலத்தின் அமைச்சர்கள் ஆவார்கள். அவர்கள், பழங்குடி மற்றும் மலைப்பகுதி வளர்ச்சித் துறை அமைச்சராக என். கயிசி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக லெட்போ ஹோகிப் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் ஜெயந்த குமார் சிங் ஆகியோர் ஆவார்கள்.
இது மட்டுமின்றி துணை முதலமைச்சராக இருந்த ஜாய் குமார் சிங்கும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுகொண்டார். மீதமுள்ள ஐந்து பேரில் மூவர் பாஜகவையும், ஒருவர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள். மற்றொருவர் சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார்.
இந்த ஒன்பது பேரும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால், பைரன் சிங் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைக்க மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி யாருக்கும் வாய்க்கவில்லை.