வெண்பனி மூடிய இமயமலைத் தொடரில் சீனாவுடனான எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, அடிதடி தொடர்வதை ஒட்டி அனைவரது பார்வையும் நமது நாட்டின் வட எல்லையில் உள்ள லடாக் பிராந்தியம் மீதே பதிந்துள்ளது. சீன இராணுவ வீரர்கள், எல்லையைத் தாண்டி ஊடுருவியுள்ளதை அடுத்து உருவான சிக்கல் அமைதியான முறையில், சுமூகமாக தீர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கு இடையேயான இந்த பிரச்னைக்கு விரைவாகத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல. எல்லைப் பகுதியில் தற்போதுள்ள பதற்றமான சூழல், அங்குள்ள கள நிலவரம் குறித்து நிறையவே எழுதப்பட்டுள்ளதால், மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பாதுகாப்பு மேலாண்மை பற்றி இங்கு பார்க்கலம்.
சீன ஆக்கிரமிப்பும் எல்லை பாதுகாப்பும்
2019ஆம் ஆண்டு மட்டும், சீன வீரர்கள் 663 முறை எல்லையைத் தாண்டி, இந்திய பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவியுள்ளனர். புது டெல்லியில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்திருப்பது போல, 2018இல் நிகழ்ந்த 404 ஊடுருவல்களைக் காட்டிலும் இது மிக அதிகமாகும். ஆனால், சீனாவுடனான எல்லையில் 1975ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்பதில் நாம் நிம்மதியுடன் திருப்தி கொள்கிறோம். இருப்பினும், இரு தரப்பும் தங்களை நிலைநாட்ட மேற்கொள்ளும் கூடுதல் நடவடிக்கைகளின் தீவிரம் காரணமாக, கட்டுப்பாடும் பொறுமையும் சீர்குலைந்து, எதிர்பாராத வகையில் பிரச்னை கைமீறி பெரியதாக வெடிக்கலாம்.
எனவே, தற்போதைய சூழலைக் கணக்கில் கொண்டு, எல்லையை நிர்வகிப்பதில் உள்ள நிர்வாக குளறுபடிகளைக் களைந்து, நடைமுறைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக மறு ஆய்வு செய்வது இன்றியமையாதது ஆகும். செம்மையான எல்லை மேலாண்மையை உறுதி செய்வதுடன், பிரச்னையை பெரிதாக்க உதவும் ஒரு சிறு தீப்பொறிக்காக காத்திருக்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, பிரச்னைகளை முளையிலேயே கிள்ளியெறியவும், எல்லைக் கோட்டை நிலைநாட்டவும் இந்த மறு ஆய்வு உதவும்.
கார்கில் போர் தந்த படிப்பினை
கார்கில் போருக்குப் பின், தேச பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, மேலண்மை ஆகியவை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சர் குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கார்கில் மறு ஆய்வு கமிட்டிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட இந்த அமைச்சர் குழு, தனது அறிக்கையில் ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மையை வலியுறுத்தும் வேளையில், பொறுப்புணர்வையும் கடப்பாட்டையும் கூடுதலாகவே வலியுறுத்துகிறது.
“தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட இராணுவ / துணை இராணுவப் பிரிவுகள் ஒரே எல்லைப்பகுதியில் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுவதால், அவற்றுக்குள் முரண்பாடுகளும், அதிகார வரம்பு, கட்டுப்பாடு குறித்த மோதல்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒரே பணித்தளத்தில், எல்லைப்பகுதியில் பல்வேறு படைப் பிரிவுகள் ஒரே நோக்கத்தில் செயல்படுவது, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு இன்றி, பொறுப்பை அறுதியிட்டு உறுதி செய்ய இயலாத சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, பொறுப்பையும் கடப்பாட்டையும் உறுதி செய்ய, ’எல்லை ஒன்று படைப்பிரிவு ஒன்று’ என்ற கொள்கை வரைமுறையை நடைமுறைப்படுத்தி, எல்லையில் துருப்புகளையும், படை வீரரையும் பணியமர்த்த வேண்டும்” என்று அந்த ஆய்வறிக்கை தெளிவாக தெரிவிக்கிறது.
சீனாவுடனான எல்லையைப் பாதுகாப்பதில் இராணுவமும், இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் (ITBP) உம் ஈடுபட்டுள்ளனர். எல்லையோர ரோந்துப் பணி, கண்காணிப்பு, ஊடுருவல் தடுப்பு என இரு அமைப்புகளும் ஒரே பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளன. சவால் மிக்க எல்லை மேலாண்மை ITBP வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், இன்று நடைபெற்று வரும் எதிரிப் படைகளுடனான மோதலில், இராணுவமே தலைமையேற்று முதன்மையான பதிலடியைத் தருகிறது.
இதனை, நாம் கடந்த காலத்தில் தேப்சாங், ச்சூமார், டோக்லாம் ஆகிய இடங்களில் கண்டிருக்கிறோம். சம்பிரதாய சிக்கலைத் தீர்க்கும் பேச்சுவார்த்தையோ அல்லது சம்பிரதாய சந்திப்போ, எல்லையில் சீன இராணுவ அதிகாரிகளுடன் கலந்துகொள்வது நமது இராணுவ அதிகாரிகளே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வரையறுக்கப்படாத இந்திய - சீன எல்லையின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு
இந்தியா - சீனா இடையேயான நீண்ட நெடிய எல்லை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இரு நாட்டு ராணுவங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கொண்டே எல்லை குறிக்கப்படுகிறது. இதனால்தான், இந்த எல்லைக் கோடு Line of Actual Control என்று அழைக்கப்படுகிறது. இப்படி வரையறுக்கப்படாத எல்லையின் பாதுகாப்பில், இரு வேறு அமைச்சகங்களின் கீழுள்ள இரு படைப் பிரிவுகள் செயல்படுவது நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
ஒரே எல்லையில் பணிபுரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தனித்த திறமை, குணாம்சங்களைக் கொண்டவை மட்டுமல்ல, அவற்றின் விரிவாக்கத் திட்டங்களும் வேறுபட்டவை. இதன் காரணமாக, நமது துருப்புக்களையும், வீரர்களையும் திறம்பட பணியமர்த்துவதில் சுணக்கம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. மேலும், பொறுப்பை உறுதிப்படுத்துவதில் தெளிவு இல்லாமல் போகிறது.