தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2020, 7:00 PM IST

ETV Bharat / bharat

மொத்த செலவையும் நாங்கள் ஏற்கிறோம் - அதிரடி காட்டும் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்திற்கு திரும்பும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் செலவையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Mamata
Mamata

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். முதலில் அவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி தர மறுத்த மத்திய அரசு, பின் அதற்கு அனுமதியளித்தது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்களில் 85 விழுக்காட்டை மத்திய அரசும் 15 விழுக்காட்டை மாநில அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மொத்த ரயில் கட்டணத்தையும் மாநில அரசே ஏற்கும் என்று ட்வீட் செய்துள்ளார். இது குறித்து மேற்கு வங்க அரசின் மாநில செயலர் ராஜீவா சின்ஹா ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதாவ்க்கு எழுதிய கடிதத்தையும் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 16 மாநிலங்களில் சிக்கியுள்ள மேற்கு வங்க தொழிலாளர்களை 105 சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துவர மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர்களுக்கான முழு கட்டணத்தையும் மேற்கு வங்க அரசே ஏற்குமென்றும் ராஜீவா சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், "30 நாள்களில் 105 ரயில்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதியளித்துள்ளது. அதற்கு பதிலாக தினசரி 105 ரயில்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் விரைவில் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மேற்கு வங்கத்திற்கு அழைத்து வர முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்

ABOUT THE AUTHOR

...view details