கொரோனா அச்சத்தால் ஆந்திர மாநிலத்தின் நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அம்மாநில தேர்தல் ஆணையர் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மணிநேரத்தில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநில ஆளுநர் பில்வாபூஷன் ஹரிசந்திரனை சந்தித்துப் பேசினார். தேர்தல் ஆணையரின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு ஜெகன் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சித்தூர், குண்டூர் மாவட்ட ஆட்சியாளர்கள், திருப்பதியின் காவல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையர்உத்தரவு பிறப்பித்துள்ளார். அலுவலர்களை இடமாற்றம் செய்வதற்கான அதிகாரத்தை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு யார் கொடுத்தது? பின் எதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது" எனக் கோபமாக தெரிவித்தார்.