கர்ப்பிணி யானை இறந்த விவகாரத்தில், உடனடியாக வனத்துறை செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, காயம்பட்ட யானையைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள வனத்துறை விளக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கேரள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுரேந்திர குமார் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், 'காயம்பட்ட யானையை மீட்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
வனத்தைவிட்டு அந்த காட்டுயானை மே 23ஆம் தேதி வெளியே வந்தது. வனத்துறை அலுவலர்கள் சில முயற்சிகள் எடுத்து அதே நாளில் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டினர். அதே யானை மே 25ஆம் தேதி வெள்ளியாறு நதியில் வந்து நின்றபோதுதான் யானைக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது எனப் புரிந்தது.
உடனடியாக, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, தூரத்திலிருந்து யானைக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின்னர் யானையின் உடல் மோசமாகவுள்ளது என கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.