தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2020, 5:04 PM IST

Updated : Jun 21, 2020, 6:55 AM IST

ETV Bharat / bharat

சூடாமணி சூரிய கிரகணம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

டெல்லி: இன்று நிகழவிருக்கும் சூடாமணி சூரிய கிரகணம் எப்போது தோன்றுகிறது, எந்தெந்த இடங்களில் இது தெளிவாகத் தெரியும் உள்ளிட்டவை குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

ring of fire
ring of fire

பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளான சந்திரன், பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நேர்கோட்டில் வந்து சூரியனை மறைக்கும் அற்புத நிகழ்வையே சூரிய கிரகணம் என்றழைக்கிறோம்.

சூரிய கிரகணத்தில் மூன்று வகை உண்டு. சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைத்துக் கொண்டால் அது முழு சூரிய கிரகணம், பகுதி மறைந்தால் அது பகுதி சூரிய கிரகணம், சூரியனை முழுமையாக மறைத்து ஒரு வளையம் மட்டும் தோன்றினால் அது சூடாமணி சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும்.

இன்று நிகழவிருப்பது சூடாமணி சூரிய கிரகணம். இந்த அரிய நிகழ்வானது வட இந்தியாவில் காலை 10:25 மணிக்குத் தோன்றி பிற்பகல் 1:54 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை யூ-டியூப், பேஸ்புக், ஸூம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப ஆரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சூடாமணி சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் நெருப்பு வளையம், ராஜஸ்தானின் சூரத்கர், அனுப்கர், ஹரியானாவின் சர்சா, குருக்ஷேத்ரா, உத்தரகாண்டின் டேராடூன், சாம்பா, சாமோலி, ஜோஷிமாத் ஆகிய பகுதிகளிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். மேலும், இந்த நெருப்பு வளையம் வெறும் ஒரு நிமிடம் மட்டுமே காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி தென் இந்தியாவில் இது பார்க்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்தியாவில் சூடாமணி சூரிய கிரகணம் அடுத்ததாக வரும் 2031ஆம் ஆண்டு மே 21ஆம் தேதிதான் நடக்கும் எனவும், அதேபோன்று முழு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா கூறுகையில், "அறிவியல் மீது இளைஞர்கள், பொதுமக்களுக்கு ஈர்ப்பு உண்டாவதற்குக் கிரகணம் போன்ற வான்வெளி நிகழ்வுகளே அற்புதமான வாய்ப்பாகும்" என்றார்.

சூரிய கிரகணத்தின்போது செய்ய வேண்டியவை:

1) ஐஎஸ்ஓ-ஆல் சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகள், கேமராக்களை மட்டுமே பயன்படுத்தி இதனைப் பார்க்க வேண்டும்.

2) 'Pinhole Camera' மூலம் திரையில் ஒளிரும் சூரிய கிரகணக் காட்சிகளைக் காண்பதே சிறந்த வழி.

3) உணவு உண்ணலாம். குடிநீர் அருந்தலாம். வெளியில் செல்லலாம். குளிக்கலாம்.

சூரிய கிரகணத்தின்போது செய்யக் கூடாதவை :

1) சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.

2) சாதாரண கண்ணாடிகளில் எக்ஸ்-ரே படச்சுருளை வைத்து சூரியனைப் பார்க்கக்கூடாது.

3) சாயம் பூசப்பட்ட கண்ணாடிகளைக் கொண்டு சூரியனைப் பார்க்கக் கூடாது.

இதையும் படிங்க :குற்றம் - 01: 'ஜூஸ் ஜேக்கிங்' மூலம் ஹேக் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்

Last Updated : Jun 21, 2020, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details