சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை காலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியோடு முடிவடைவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்திற்கான 4 வரைவோலைகளை பெங்களூருவில் உள்ள 34ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் நவ.17ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ரசீதை பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கும் நவ.18ஆம் தேதி அனுப்பி வைத்தனர்.
சிறை விதிகளின் படியும், நன்னடத்தை அடிப்படையிலும் வரும் 2021 ஜனவரி 27ஆம் தேதியன்று தன்னை விடுவிக்க வேண்டுமென கடந்த 2 ஆம் தேதியன்று சிறை அலுவலர்களிடம் சசிகலா நடராஜன் கோரிக்கை விடுத்திருந்தார். சசிகலா நடராஜனின் விண்ணப்பத்தை பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் இன்று மறுதலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.