தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2020, 4:24 AM IST

ETV Bharat / bharat

ராமர் கோயிலை எழுப்ப மூலவர்களாக இருந்த அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?

டெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்காக ரதயாத்திரை நடத்திய பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு, அக்கோயிலின் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் எழுப்ப மூலவர்களாக இருந்த அத்வானி, ஜோஷி இருவருக்கும் பூமிபூஜைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா ?
அயோத்தி ராமர் கோயில் எழுப்ப மூலவர்களாக இருந்த அத்வானி, ஜோஷி இருவருக்கும் பூமிபூஜைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா ?

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தீவிரமாகச் செய்துவருகிறது.

இந்நிலையில், ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்ற தீர்க்கமாகச் செயல்பட்டு, தனது அரசியல் வாழ்வில் பெரும்பகுதியைச் செலவு செய்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களிடம் பேசியபோது, அவர்கள் இருவருக்கும் இன்னும் அழைப்பு சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அத்வானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ”எந்தவொரு அமைப்பினரிடமிருந்தோ அல்லது கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளையிடமிருந்தோ அவருக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பிதழ் இல்லாமல் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என தெரிவித்தனர்.இதேபோன்ற கருத்துக்களே ஜோஷியின் நெருங்கிய வட்டாரமும் வெளிப்படுத்தின.

இதுதொடர்பாக கோயிலின் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துவருவோர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி, அத்வானி, ஜோஷி உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு பூமி பூஜை விழாவிற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்தியா முழுவதும் ஆதரவலைகளை எழுப்ப எண்ணிய அத்வானி, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியில் சோம்நாத்தில் ரத யாத்திரையைத் தொடங்கினார். அந்த ரத யாத்திரை அக்டோபர் 30ஆம் தேதியன்று அயோத்தியை அடையவிருந்த சூழலில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அத்வானியும் ஜோஷியும் இலக்கை அடைவதற்கு முன்பே தடுத்துநிறுத்தப்பட்டனர்.

இவர்களது வன்முறையைத் தூண்டும் பேச்சு இந்திய மதச்சார்பின்மை வரலாற்றில் கறுப்புப் பக்கங்களில் எழுதப்பட்ட, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமென குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details