இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மின் கட்டணத்தை குறைக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசாதது ஏன்? வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய பாருங்கள். அரசு ஊழியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் தலைவிரித்தாடுகின்றது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை. ஒரு நாள் செய்திக்காக முதலமைச்சர் நாராயணசாமி ஷோ காட்டி வருகிறார்.
மாநிலத்தில் வருவாய் பெருகுவதற்கு எதையும் இந்த அரசு செய்யவில்லை. போராட்டம் நடத்துவது தனது உரிமை என்று பேசிவரும் முதலமைச்சர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் 18 மாதங்களாக சம்பளம் போடாத தவறை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கின்றனர். ஆனால், இவர் துணைநிலை ஆளுநரை எதிர்த்து போராடவுள்ளதாக பேசியுள்ளார். இவருக்கு மட்டும் போராட்டம் நடத்த எப்படி உரிமை உள்ளது?
அரசாங்கத்தின் நிர்வாகம், அரசாங்கத்தின் அன்றாட பணிகள், அரசின் அமைச்சரவை விஷயங்கள் இதையெல்லாம் முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம் என்கிற நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநரும், முதலமைச்சரும்தான் காரணம். இச்சம்பவம் வேதனைக்குரிய விஷயமாகும். இவர்கள் இருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால் புதுச்சேரி மாநில அரசு நிர்வாகம் சீரழிந்துள்ளது” என்று கடுமையாக சாடினார்.