இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னையில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது ஆசிய பிராந்தியத்தில் யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் வந்து நிற்கிறது. தொடக்க காலத்தில், சீனாவை இந்தியா நட்பு நாடாகவே கருதியது. 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி நேரு பிரதமராக இருந்தபோது, யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில், இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. சீனா போர் தொடுக்காது என்ற நம்பிக்கை இருந்ததால், இந்தியா அப்போது ராணுவத்தை தயாராக வைத்திருக்கவில்லை.
வேறு வழியின்றி, எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20,000 பேர் குவிக்கப்பட்டனர். சீனா சார்பாக கிட்டத்தட்ட 80,000 பேர் குவிக்கப்பட்டனர். சீனா போர் நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஒரு மாத காலமாகத் தொடர்ந்த போர், 1962, நவம்பர் 21ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, 1967ஆம் ஆண்டு சிக்கிமில் நடைபெற்ற போரில் சீனாவுக்கு இந்தியா பதிலடி தந்ததாகக் கூறப்படுகிறது. அப்போரில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீன ராணுவத்தைச் சேர்ந்த 400 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சிக்கிமில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது, சீனாவை மிகுந்த ஆத்திரத்தில் தள்ளியது.
எல்லைப் பகுதிகள் குறித்த விவகாரத்தில், தான் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளை மற்ற நாடுகளிடம் விட்டுக் கொடுக்கும் போக்கு, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு இருந்ததில்லை. இதனை, போர் தந்திரமாக சீன ராணுவம் வைத்திருந்தது. மற்ற நாடுகளிடம் உள்ள எல்லைப் பகுதிகளையும் மிரட்டி வாங்கும் போக்கு சீனாவிடம் இருந்தது.
1987ஆம் ஆண்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சும்தோரோங் சூ பள்ளாத்தாக்கில்இந்தியா - சீன ராணுவங்களுக்கிடையேமோதல் வெடித்தது. போர் மூளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இந்தியத் தூதர்கள் சீனாவிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு போரைத் தவிர்த்தனர். இதனைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சீனாவிற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தவுலத் பேக் ஓல்தி பகுதியில், சீனா ராணுவ முகாம்களை அமைத்ததாக இந்தியா குற்றம் சாட்டியது. பின்னர், 19 கிலோ மீட்டர் தொலைவில் சீனா முகாம்களை அமைத்ததாகவும் இந்தியா தெரிவித்தது.
தொடர்ந்து, சீன ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் இந்தியப் பகுதிகளுக்குள் நுழைந்து, அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், சீனா இதற்கு மறுப்பு தெரிவித்தது. பின்னர் அந்த ஆண்டு, மே மாதத்தில் இந்திய, சீன நாடுகள் தங்களது ராணுவங்களை திரும்பப் பெற்றதை அடுத்து பதற்றம் தணிந்தது.