நாட்டில் திருநங்கைகளுக்குப் பிரத்யேக கொள்கைகளைக் கொண்டுவந்த முதல் மாநிலமாகத் திகழும்கேரளா, அவர்களது சமூகத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருகிறது. குறிப்பாக, பெரும்பாலான திருநங்கைகள் பள்ளி, கல்லூரி படிப்புகளிலிருந்து வெளியேறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருநங்கைகளின் கல்விக்காக 'சமன்வயா' திட்டம் அங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சேர 918 திருநங்கைகள் தயாராக இருப்பது தெரியவந்தது. அதில் நான்காம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, உயர்நிலைக்குச் சமமான படிப்புகளுக்குப் பதிவுசெய்துகொள்ளலாம். இந்தத் தேர்வுகளை கேரளாவின் சமூக நீதித் துறையும், அம்மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையமும் இணைந்து நடத்திவருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற உயர்நிலைக்குச் சமமான தேர்வில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 22 திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர். அதில், 18 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், தேர்ச்சிப்பெற்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான கார்த்திக், கேரள யுனிவர்ஸ்டியில் பிஏ வரலாறு பாடப்பிரிவில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கேரள சமூக நீதித் துறை அலுவலர்கள் கூறுகையில், "சமன்வயா திட்டத்தின் மூலம் திருநங்கைகள் தங்களது கல்வியை எவ்விதமான தடையின்றி தொடர முடியும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும். வேலை கிடைப்பதன் மூலம் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு அவர்கள் செல்வார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தனர்.
கேரளத்தில் இதுவரை 39 திருநங்கைகள் 10ஆம் வகுப்புக்கு இணையான தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 62 பேர் உயர்நிலைக் கல்விக்கு இணையான தேர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.