மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அர்ஜுன் சிங் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். நான் மட்டுமின்றி 100 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். அவர்கள் பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். சிலர் தேர்தலுக்கு முன்பே கூட இணையக்கூடும்.
மேலும் வேறு சிலர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இணைய முடிவு செய்துள்ளனர். இதனால் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தாமலேய பாஜக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.