கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிப்கோ இயக்கத்தின் முன்னோடி பகுகுணா, இன்று (மே.21) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
இமயமலைக் காடுகளைப் பாதுகாக்கும் வகையில், சிப்கோ இயக்கத்தைக் கட்டியெழுப்பிய பிரபல சுற்றுச் சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா, பலவிதமாக அடையாளப்படுத்தப்பட்டாலும், எந்தப் புகழ் வெளிச்சத்தையும் தன் மீது பாயவிடாமல் மக்கள் நலப் பணியினை தவமாக மேற்கொண்டு வந்தார்.
"எல்லா காலத்திலும் இந்த வாழ்க்கையில் எதிர்மறைகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் அதை மட்டுமே நினைத்து சோர்ந்து தளர்ந்து போய் விடாதீர்கள். மனதைத் துவளவிடாதீர்கள். இப்போது மாதிரியே எப்பவும் கூட்டாக இருங்கள். கூட்டமாக இருப்பதுதான் மனதுக்கு எப்பவுமே பலம். அதனால், இந்தக் கூட்டு மனோபாவம் ஒன்றுபோதும், எவ்வளவு பெரிய எதிரப்புக்கு முன்னாடியும் ஆயுதமில்லாமல் நிக்கலாம். இந்தத் தன்மையோட அடிப்படை உண்மைதான்" என தத்துவப்பூர்மாக பகுகுணா தெரிவித்துள்ளார்.
முன்னதாக பகுகுணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பகுகுணாவின் இழப்பு, நமது தேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இழப்பு என்றும், இயற்கையோடு இணக்கமாக வாழும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த நெறிமுறைகள் குறித்து அவர் வெளிப்படுத்திச் சென்றுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பகுகுணாவின் இழப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ”ஒரு சகாப்தம் முடிந்தது. சுற்றுச்சூழல் போராட்டங்களின் முன்னோடி மறைந்தார். உங்களின் கரம் பற்றி நாங்கள் நடப்போம். உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் அயராது பாடுபடுவோம். போய் வாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.