டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்.2) காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி, விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். விமானப் போக்குவரத்துத் துறையின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக ஏதேனும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளதா? இந்த பகுப்பாய்வுகளை செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், விமானப் போக்குவரத்து துறை, கடந்த மூன்று ஆண்டுகளில் 28,907 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் 4,770 கோடி ரூபாயும், 2020ஆம் ஆண்டில் 12,479 கோடி ரூபாயும், 2021ஆம் ஆண்டில் 11,658 கோடி ரூபாயும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விமானங்களை தனியார் நிறுவனங்கள் இயக்குவதால், விமான நிறுவனங்களின் நிதி நிலையை அரசாங்கம் பகுப்பாய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.