நியூயார்க் : கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முதலே பெரும் பொருளாதார பேரிழப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நிதி நிலையை சுட்டிக் காட்டி டிவிட்டர் தொடங்கி பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் பணி நீக்கத்தை கையில் எடுத்து உள்ளன. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கியது முதல், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி பணி நீக்க கலாச்சாரத்தை பெரியளவில் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்கள் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பணியாளர் நீக்கத்தை கையில் எடுத்தன. இந்த முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனமும் பணியாளர் நீக்கத்தில் மும்முரமாக இறங்கி உள்ளது.
ஆண்டு தொடக்கத்தில் நடப்பாண்டுக்குள் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு அமேசான் வெப் சிரீஸ் தலைமை செயல் அதிகாரி ஆடம் செலிப்ஸ்கை மற்றும் மனித வள மேம்பாட்டு தலைவர் பெத் கலெட்டி ஆகியோர் தெரியப்படுத்தி உள்ளார்.