தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 ஆண்டுகளுக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

ஜம்மு காஷ்மீரின் நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2 ஆயிரத்து 750 பக்தர்களுடன் அமர்நாத் குகை கோயிலுக்கு புனித யாத்திரையாக இன்று சென்றனர்.

By

Published : Jun 30, 2022, 7:09 PM IST

அமர்நாத் யாத்திரை தொடக்கம்
அமர்நாத் யாத்திரை தொடக்கம்

நுன்வான் (ஜம்மு காஷ்மீர்):தெற்கு காஷ்மீர், அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெறாத நிலையில் இந்தாண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2 ஆயிரத்து 750 பக்தர்களுடன் அமர்நாத் குகை கோயிலுக்கு புனித யாத்திரையை இன்று (ஜூன் 30)தொடங்கியது. இந்த யாத்திரையை துணை ஆணையர் பியூஷ் சிங்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

யாத்திரை குறித்து சிங்லா கூறுகையில், "43 நாட்கள் நடைபெறும் யாத்திரை சுமூகமாக நடைபெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் புனித தலத்தில் தரிசனம் செய்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு: பெரும்பாலானோர் நடைபயணமாகவே புனித தலத்திற்கு செல்வர். ஷீஷ்நாக் மற்றும் பஞ்சதர்னி என்ற இடங்களில் தங்கி மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்வர். முன்னதாக, நேற்று (ஜூன் 29) ஜம்மு முகாமிலிருந்து குகை கோயிலுக்கு 4 ஆயிரத்து 890 பக்தர்கள் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யாத்திரை நடத்தப்படுவதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் காரணமாக அமர்நாத் யாத்திரை பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்பு, 2020, 2021 கரோனா பரவல் காரணமாக யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டு புனித யாத்திரைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அசாம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யாத்திரையையொட்டி ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஆதார் மற்றும் அடையாள அட்டை காண்பிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது.

இதையும் படிங்க:அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details